இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில், எதிர்காலத்தில் வைத்திய பீடம் அமைப்பதே தன்னுடைய இலட்சியமாகும் என இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் தெரிவித்தார்.
நிந்தவூர் பிரதேச இளைஞர் தன்னார்வ அணியினர், உபவேந்தருடன் கல்வி அபிவிருத்தி முறைபற்றி கலந்துரையாடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தற்பொழுது கிழக்கு மாகாண ஆயுர்வேத திணைக்கள வைத்தியர்கள் தன்னை சந்தித்து, இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் யுனானி மருத்துவ டிகிரி கற்கை நெறியினை ஆரம்பிப்பதற்கான முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளனர். இது வரவேற்கத்தக்கக்கூடிய விடயமொன்றாகும்.
இது ஒரு வித்தியாசமான சிந்தனையும் புதிய முயற்சியும் ஆகும். அந்த அடிப்படையில் இவர்களால் முன்மொழியப்பட்ட முன்மொழிவுகளை பெரிதும் மதிக்கின்றேன். எதிர்காலத்தில் இவைகளை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.
இருந்தபோதும், என்னுடைய காலத்திற்குள் இந்த பல்கலைக்கழகத்தில் வைத்தியபீடமொன்றினை உருவாக்குவதே எனது இலட்சியமாகும். அதனை நிறைவேற்றுவதற்கு சகல வழிகளிலும் முயற்சிகளை எடுக்க உள்ளேன்.
அந்த அடிப்படையில், ஜனாதிபதி அவர்களினதும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஒத்துழைப்பும், கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சின் ஒத்துழைப்புகள் கட்டாயம் பெறப்பட வேண்டும்.
பல்கலைக்கழகங்கள் என்பது விரிவுரையாளர்களுக்கும், மாணவர்களுக்கும் மட்டுமே உரித்துடையது என்ற மாயையை நீக்கி, அதனை சமூக பிணைப்பாக கொண்டுவர தீர்மானித்துள்ளேன்.
கிராமங்கள் தோறும், நகரங்கள் தோறும் பல்கலைக்கழகத்தின் பணிகளை அடி மட்டம் வரைக்கும் கொண்டு செல்வது தற்போதைய காலத்தின் தேவையாக உள்ளது. அதனை விரைவில் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம் என்றார்.
சுலைமான் றாபி
No comments:
Post a Comment