கொரோனா தொற்றை முற்றாக இல்லாதொழிப்பதற்காக அரசாங்கம் தீவிர அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது விமர்சனங்களை தவிர்த்து அரசாங்கத்திற்கு கொவிட்19 தொற்றை இல்லாதொழிக்க ஒத்துழைப்பு வழங்குங்கள் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கேட்டுக் கொண்டார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கான ஒட்சிசன் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக ஒட்சிசன் வழங்கும் நவீன இயந்திர பொருட்களை இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் வைத்தியசாலை பணிப்பாளர் கலாரஞ்சனி கணேசலிங்கம் தலைமையிலான நிர்வாகத்திடம் கையளிக்கும் நிகழ்வின்போது இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தெடர்ந்து தெரிவிக்கையில், கடந்த கொவிட் தொற்றின் முதலாம் இரண்டாம் அலையை வெற்றி கொண்டு இருந்தாலும் “நாட்டுக்குள் தற்போது, “டெல்டா” வீரியம் கொண்ட கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் அதிகரித்துள்ளமையானது பெரும் சவாலை ஏற்படுத்தி உள்ளது. இந்த சவால் மிக்க தருணத்திலும் நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசாங்கம் மிக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.
குறிப்பாக இந்த தருணத்தில் சுகாதாரத்துறை சார்ந்த அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். நாட்டில் தற்போது முடக்கநிலை காணப்பட்ட போதிலும் சுகாதாரத்துறை சார்ந்த அதிகாரிகள் மிகவும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றுகின்றனர்.
அந்த அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வைத்தியசாலைகளின் அபிவிருத்தி குறித்து பல வேலைத்திட்டங்கள் அரசாங்கத்தினால் முன்னெடுப்பதற்கான முன்மொழிவுகளை இந்த பிரதேசத்துக்கான ராஜாங்க அமைச்சர் என்ற வகையில் முன்மொழிந்து உள்ளேன். மிக விரைவில் அனைத்து அபிவிருத்தி வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படும்.
தற்போது மட்டக்களப்பு மாவட்ட போதனா வைத்தியசாலையில் காணப்படும் ஒட்சிசன் தட்டுபாடு தொடர்பில் தீர்வு பெற்றுக் கொடுக்கவே நான் நடவடிக்கை எடுத்துள்ளேன் என தெரிவித்தார்.
கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுவாசம் ரீதியான பிரச்சனையே காணப்படுகின்றது இந்த நோயாளர்களுக்கு ஒட்சிசன் பெற்றுக் கொடுப்பது மிக அவசியமானதாக உள்ளது.
எனவே ஒட்சிசன் தேவையை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சரிடம் தெரிவித்துள்ளேன். அதற்கு மிக விரைவில் தீர்வு பெற்றுத் தருவதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவிக்கையில் அரசாங்கத்தின் மீது எதிர்க்கட்சியினர் இன்று பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர் இந்த அரசாங்கம் கண்ணுக்குத் தெரியாத ஒரு நோய்க் கிருமியுடன் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் போராடிக் கொண்டிருக்கிறது.
ஆனால் எதிர்க்கட்சியினர் கடந்த அரசாங்கத்தில் இருந்த போது கண்ணுக்குத் தெரிந்து நடந்த விடயம் குண்டுத் தாக்குதல். இந்த குண்டுத் தாக்குதல் எங்கு எப்போது நடக்கப்போகும் என்று அந்த அரசாங்கத்துக்கு தெரிந்திருந்தது. அதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காதவர்கள் இன்று அரசாங்கத்துக்கு எதிரான வீண் புரளி பிரசாரங்களை செய்து கொண்டிருக்கின்றார்கள் இது ஏற்றுக் கொள்ள முடியாத நடவடிக்கை என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்
அமைச்சரின் ஊடக இணைப்பாளர்
ராஜரத்தினம் சுரேஷ்குமார்
No comments:
Post a Comment