நாட்டை விட்டு வெளியேறுவதற்கு மக்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் பெரும்பாலானோர் உயிரை கூட பொருட்படுத்தாமல் நாட்டை விட்டு வெளியேறுவார்கள். அந்தளவிற்கு மக்கள் தற்போதைய அரசியல் செயற்பாடுகளை கடுமையான முறையில் வெறுக்கிறார்கள். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் நிர்வாகம் எத்தன்மையில் அமையும் என்பதை முன்கூட்டியதாக குறிப்பிட்டேன். எவரும் கருத்திற் கொள்ளவில்லை. இன்று அனுபவ ரீதியில் உணர்கிறார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.
களுத்துறையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தற்போதைய நிலை குறித்து கவலையடைகிறேன். சுமார் 40 வருட காலமாக அவருடன் ஒன்றினைந்து அரசியலில் செயற்பட்டுள்ளேன்.
இன்று அரச தலைவர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் போது இலங்கையர்களே கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இவ்வாறான நிலை முன்னொருபோதும் ஏற்படவில்லை.
பொருளாதாரம் தொடர்பில் குறிப்பிடுவதற்கு ஏதுமில்லை. பொருளாதாரம் பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளது. தவறான முகாமைத்துவம் காரணமாக அனைத்து துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாகவே கருப்பு பணம் சுத்தரிப்பு சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் நிர்வாகம் எவ்வாறான தன்மையில் இருக்கும் என்பதை மக்களுக்கு ஜனாதிபதி தேர்தல் இடம் பெறுவதற்கு முன்னர் குறிப்பிட்டேன். ஆனால் மக்கள் அதனை கருத்திற் கொள்ளவில்லை. தற்போது அனுபவ ரீதியில் உணர்ந்துள்ளார்கள். அனைத்தையும் ஒரு சிறந்த படிப்பினையாக கொண்டு அரசியல் ரீதியில் சிறந்த தீர்மானத்தை இனியாவது முன்னெடுக்க வேண்டும் என்றார்.
கேசரி
No comments:
Post a Comment