எம்.ஆர்.எம்.வசீம்
இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தயின் நடவடிக்கை மனித உரிமை மீறல் மாத்திரமல்லாது, சட்டத்தின் ஆட்சிக்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் பாரிய சவாலாகும். அதனால் ராஜாங்க அமைச்சரின் நடவடிக்கை தொடர்பில் சபாநாயகர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று கூடியபோது எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் விடுத்திருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த வெலிகடை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைகளுக்கு சென்று, மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் மற்றும் சிறைக் கைதிகளுக்கு அழுத்தங்களை விடுத்திருந்தமை சிறைக் கைதிகளின் உயிர் பாதுகாப்பு தொடர்பில் பாரிய பிரச்சினையாகும்.
அத்துடன் குறித்த இராஜாங்க அமைச்சரின் நடவடிக்கை மனித உரிமை மீறல் மாத்திரமல்லாது, சட்டத்தின் ஆட்சிக்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் பாரிய சவாலாகும்.
அதேபாேன்று மக்கள் பிரதிநிதிகள் தொடர்பில் மக்களின் நம்பிக்கை இல்லாமல் போகின்றது. அதன் மூலம் ஜனநாயகம் மற்றும் சுதந்திரமான மற்றும் நீதியான தேர்தல் ஒன்றின் ஊடாக எதிர்பார்க்கப்படும் பெறுபேறு என்ன என்பது தொடர்பில் மக்களுக்கு சந்தேகம் ஏற்படுவதற்கும் காரணமாகின்றது என்பது தேர்தல் ஆணைக்குழுவின் நிலைப்பாடாகும்.
எனவே இவ்வாறான மக்கள் பிரதிநிதிகளின் மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்துவதற்காக, இது தொடர்பாக தகுந்த நடவடிக்கை எடுப்பதற்கு செயற்படுமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்திருக்கின்றது.
No comments:
Post a Comment