ஆப்கானிஸ்தானில் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கும் ராணுவத்துக்கும் உதவியவர்கள், பிரிட்டனுக்கு தப்பி வந்திருந்தால், அவர்கள் நிரந்தரமாக இங்கேயே தங்கியிருக்க வசிப்பிட உரிமை வழங்கப்படும் என்று பிரிட்டன் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானியர்கள் மறுவாழ்வு மற்றும் ஆதரவுக் கொள்கை திட்டத்தின்படி கடந்த ஆகஸ்ட் 13 ஆம் திகதி முதல் இதுநாள் வரை அந்த நாட்டில் இருந்து எட்டாயிரத்துக்கும் அதிகமானோரை பிரிட்டன் அரசு மீட்டுள்ளது.
அங்கு மேலும் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தொழிலாளர் கட்சி தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து பிரிட்டன் துருப்புகள் கடந்த வாரம் முழுமையாக வெளியேறின. அத்துடன் அந்த நாட்டில் இருந்த 20 ஆண்டுகளாக முகாமிட்டிருந்த பிரிட்டன் படையின் இருப்பும் முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து பிரிட்டனில் தஞ்சம் அடைந்தவர்கள், தங்களுடைய அரசுக்கும் ராணுவத்துக்கும் உதவியிருந்தால் அவர்கள் தொடர்ந்து பிரிட்டனிலேயே வசிக்கலாம் என்று பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சின் செயலாளர் டோமினிக் ராப் தெரிவித்துள்ளார்.
அத்தகைய நபர்கள் எத்தனை பேர் எந்ற விவரம் தற்போதைக்கு தன்னிடம் இல்லை என்றும் அவர் கூறினார்.
ஆபரேஷன் 'வார்ம் வெல்கம்' என்ற பெயரில் இந்த புனர்வாழ்வுத் திட்டத்துக்கு பிரிட்டன் அரசு பெயரிட்டிருக்கிறது. பிரிட்டனில் தஞ்சம் அடைந்த ஆப்கானியர்களுக்கு புதிய வாழ்வு அமைவதை உறுதிப்படுத்தப்படுவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
No comments:
Post a Comment