(நா.தனுஜா)
நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்தால் அதனை மீண்டும் சீர் செய்ய முடியும். ஆனால் மரணிக்கும் உயிர்களை மீண்டும் மீட்டுக் கொண்டு வர முடியாது. ஆகவே தேவையேற்படும் பட்சத்தில் ஒரு மாதம் வரையில் நாட்டை முடக்கி, தடுப்பூசி வழங்கல் உள்ளடங்கலாக வைரஸ் பரவலின் தீவிரத்தைக் கட்டுப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது, நாட்டின் மிகவும் முற்போக்கான அரசியல்வாதிகளில் ஒருவரான மங்கள சமரவீரவின் எதிர்பாராத இழப்பு தொடர்பில் எனது கவலையை வெளிப்படுத்த விரும்புகின்றேன். அவர் இன்று இல்லாவிட்டாலும், கடந்த காலத்தில் தொலைநோக்கு சிந்தனையுடன் அவரால் கூறப்பட்ட விடயங்கள் இப்போது நிதர்சனமான உண்மையாக மாறியிருக்கின்றன.
அந்த வகையில் அவரது எதிர்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் இளம் உறுப்பினர்களால் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் அவை விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்.
எமது நாடு முன்னேற்றமடைய வேண்டுமெனில் முதலில் எவ்வித இன, மத, மொழி வேறுபாடுகளும் இல்லாத, அனைவருக்கும் பொதுவான நாடாக இலங்கை மாற வேண்டும் என்பதே அவரது எதிர்பார்ப்பாக இருந்தது.
பல்வேறு வளங்களைக் கொண்டிருந்த எமது நாட்டில் அண்மைக் காலத்தில் 'இல்லை, முடியாது' என்ற இரு சொற்களைத் தவிர வேறெதனையும் கேட்க முடியவில்லை. கல்வி, சுகாதாரம், சீனி, பால்மா, உரம், மருந்துப் பொருட்கள் எதுவுமே இல்லை.
அதேபோன்று அன்டிஜன் பரிசோதனை மோசடி தொடர்பில் கண்டறிதல், உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல் சூத்திரதாரிகளை வெளிப்படுத்தல், டொலரின் பெறுமதியைக் குறைத்தல் உள்ளிட்ட விடயங்களுக்கு 'முடியாது' என்பதே பதிலாக இருக்கின்றது.
கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிர்க்கட்சியே பொறுப்புக்கூற வேண்டும் என்று ஆளுந்தரப்பு உறுப்பினர் ஒருவர் கூறுகின்றார். நாட்டை உரிய நேரத்தில் முடக்காமை, தடுப்பூசியை தாமதமின்றி உரிய நேரத்தில் பெற்றுக் கொள்ளாமை, சுகாதாரத் தரப்பினரின் ஆலோசனைகளுக்கு அமைவாக செயற்படாமை உள்ளிட்ட அனைத்தும் எம்முடைய தவறா? இவையனைத்தையும் செய்யத் தவறியவர்கள் யார்?
உரிய தருணத்தில் முறையான நடவடிக்கைகளை மேற்கொண்டு கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்குத் தவறிய அரசாங்கம், இப்போது அதன் இயலாமையை மறைத்துக் கொள்வதற்காக எதிர்க்கட்சியின் மீது பழி சுமத்துகின்றது. அரசாங்கம் தற்போதேனும் குறைந்தபட்சம் சுகாதாரப் பிரிவினர் மற்றும் வைத்திய நிபுணர்களின் பரிந்துரைகளுக்கு அமைவாக செயற்பட முன்வர வேண்டும்.
தற்போதும் அரசாங்கத்திற்கு வாய்ப்பிருக்கின்றது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்டிருக்கும் இந்த நெருக்கடியை விஞ்ஞான ரீதியான செயற்பாடுகள் ஊடாகவே வென்றெடுக்க முடியுமே தவிர, மூட நம்பிக்கைகளின் மூலம் ஒருபோதும் தீர்வு காண முடியாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
இல்லை என்றும் முடியாது என்றும் கூறுவதற்காகத் தற்போதைய அரசாங்கத்திற்கு 69 இலட்சம் பேர் வாக்களிக்கவில்லை. ஆகவே இப்போதேனும் அரசாங்கம் அதன் தவறுகளைத் திருத்திக் கொண்டு, கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பட்சத்தில் அதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.
நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்தால் அதனை மீண்டும் சீர் செய்ய முடியும். ஆனால் மரணிக்கும் உயிர்களை மீண்டும் மீட்டுக் கொண்டு வர முடியாது. ஆகவே தேவையேற்படும் பட்சத்தில் ஒரு மாதம் வரையில் நாட்டை முடக்கி, தடுப்பூசி வழங்கல் உள்ளடங்கலாக வைரஸ் பரவலின் தீவிரத்தைக் கட்டுப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கின்றோம்.
அன்டிஜன் பரிசோதனைக்கான விலை நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து தீர்மானங்களை மேற்கொள்வதற்குப் பொறுப்பாக சஜித் பிரேமதாஸ, ஹர்ஷ டி சில்வா, எரான் விக்ரமரத்ன, அநுரகுமார திஸாநாயக்க போன்ற ஊழல் மோசடிகளில் ஈடுபட்டிருக்காதவர்களை உள்ளீர்த்துக் குழுவொன்றை அமைக்குமாறு அரசாங்கத்தைக் கோருகின்றோம். அதனூடாக அனைத்துக் கட்சிகளினதும் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்து கொள்ள முடியும் என்று குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment