கொழும்பு - காக்கை தீவில் கரையொதுங்கிய சடலம் : மேலும் 5 இராணுவ புலனாய்வாளர்களை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 15, 2021

கொழும்பு - காக்கை தீவில் கரையொதுங்கிய சடலம் : மேலும் 5 இராணுவ புலனாய்வாளர்களை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

(எம்.எப்.எம்.பஸீர்)

மட்டக்குளி - காக்கை தீவு கடற் கரையில், கரையொதுங்கிய, முகம் துணியொன்றினால் மறைத்து கட்டப்பட்டும், கை, கால்கள் கயிற்றினால் கட்டப்பட்ட நிலையிலும் இருந்த சடலம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விஷேட விசாரணைகளில், கைது செய்யப்பட்டுள்ள மேலும் 5 இராணுவ புலனாய்வாளர்களை நாளை (16.09.2021) வரை தடுப்பில் வைத்து விசாரிக்க கொழும்பு மேலதிக நீதிவான் சந்திம லியனகே பொலிஸாருக்கு அனுமதியளித்துள்ளார்.

கொழும்பு வடக்கு குற்ற விசாரணைப் பிரிவு முன் வைத்த கோரிக்கையை ஏற்று அவர் இந்த அனுமதியை அளித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் இராணுவ புலனாய்வுப் பிரிவின் கோப்ரல் உள்ளிட்ட 6 இராணுவத்தினரும் மட்டக்குளி பிரதேசத்தின் கிராம சேவகரான பெண்னொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முகம் துணியொன்றினால் மறைத்து கட்டப்பட்டும், கை, கால்கள் கயிற்றினால் கட்டப்பட்ட நிலையிலும் சடலமாக மீட்கப்பட்ட நபர், தற்போது கைது செய்யப்பட்டுள்ள கிராம சேவகரின் கணவர் எனவும், அவர் 40 வயதுடைய எல்லை வீரர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மட்டக்குளி இராணுவ முகாமில் கடமையாற்றிய, புலனாய்வுப் பிரிவின் கோப்ரல் உள்ளிட்ட 6 பேரை இராணுவ பொலிஸ் பிரிவு கைது செய்து மேலதிக விசாரணைக்ளுக்காக பொலிசாரிடம் ஒப்படைந்திருந்து. இந்நிலையில் பொலிஸார் பெண் கிராம சேவகரைக் கைது செய்திருந்தனர்.

இவ்வாறான நிலையில், நேற்று (14) குறித்த பெண் கிராம சேவகரையும், இராணுவ புலனாய்வு கோப்ரலையும் மட்டும் கொழும்பு பிரதன நீதிவான் புத்திக ஸ்ரீ ராகல முன்னிலையில் ஆஜர் செய்த பொலிஸர், அவர்களை 7 நாள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஏனைய 5 இராணுவத்தினரும் நேற்று பிற்பகல் மன்றில் ஆஜர் செய்யப்படனர். இதன்போதே அவர்களை குற்றவியல் சட்டத்தின் 290 ஆம் அத்தியாயத்துக்கு அமைய 48 மணி நேரம் தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதித்தது.

கொழும்பு பிரதிப் பொலிஸ்மா அதிபர் சந்ரகுமார, கொழும்பு வடக்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் தெஹிதெனிய ஆகியோரின் மேற்பார்வையில் கொழும்பு வடக்கு குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நலின் பிரியந்த தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முன்னதாக கடந்த ஆகஸ்ட் 20 ஆம் திகதி, முகம் துணியொன்றினால் மறைத்து கட்டப்பட்டும், கை, கால்கள் கயிற்றினால் கட்டப்பட்ட நிலையிலும் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் , மட்டக்குளி - காக்கை தீவு கடற் கரையில் ஒதுங்கியுள்ள நிலையில் மீட்கப்பட்டிருந்தது.

அது தொடர்பில் கொழும்பு மேலதிக நீதிவான் லோச்சனீ அபேவிக்ரமவுக்கும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, நீதிவான் நீதிமன்ற விசாரணைகளும் இடம்பெற்றன..

இது தொடர்பில் இடம்பெற்ற மேலதிக விசாரணைகளிலேயே, அது ஒரு கொலை என தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டு, தற்போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment