கன்டெய்னரில் 15,000 கோடி மதிப்புள்ள 3,000 கிலோ ஹெரோயின் கடத்தல் - சென்னையில் தம்பதி கைது - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 21, 2021

கன்டெய்னரில் 15,000 கோடி மதிப்புள்ள 3,000 கிலோ ஹெரோயின் கடத்தல் - சென்னையில் தம்பதி கைது

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் 3,000 கிலோ எடையுள்ள சுமார் 15,000 கோடி ரூபா மதிப்பிலான ஆப்கன் ஹெரோயின் போதைப் பொருளை வருவாய் புலனாய்வு (டிஆர்ஐ) அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக சென்னையில் வைத்து ஒரு தம்பதியை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ஈரானின் பண்டார் அப்பாஸ் துறைமுகத்தில் இருந்து குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்துக்கு வந்த மொத்தம் 40 டன் எடையுள்ள கன்டெய்னர்களை வழக்கமான சோதனை நடைமுறைகளின்படி போதைப் பொருள் பரிசோதனைக்கு அதிகாரிகள் உட்படுத்தினர்.

அந்த கன்டெய்னர்கள் ஆப்கானிஸ்தானில் தயாரிக்கப்பட்டதாக பகுதியளவு சோப்புக்கல் இருப்பதாக ஆவணங்கள் கூறின. அந்த சரக்குகளின் எடை ஆயிரக்கணக்கில் இருப்பதால் அவற்றின் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அதன் தயாரிப்பு உள்ளடக்கம் குறித்து மேலதிக பரிசோதனைக்கு நடவடிக்கை எடுத்தனர். அந்த கற்கள் இடம்பெற்ற கன்டெய்னர்கள், குஜராத்தின் காந்தி நகரில் உள்ள தடயவியல் பரிசோதனை கூடத்தில் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

அதில் ஒரு கன்டெய்னரில் 1999.579 கிலோ எடையுள்ள ஹெரோயின், இரண்டாவது கன்டெய்னரில் 988.64 கிலோ எடையுள்ள ஹெரோயின் என மொத்தம் 2,988.219 எடையுள்ள ஹெரோயின் போதைப் பொருள் மறைக்கப்பட்டிருந்தது தெரிய வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த போதைப் பொருள் ஆப்கானிஸ்தானில் விளைவிக்கப்பட்ட போதைச் செடிகளில் இருந்து தயாரிக்கப்பட்டவை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

அவற்றின் சர்வதே மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் 15 ஆயிரம் கோடிக்கும் மேல் இருக்கும் என்று கூறிய அதிகாரிகள், தேசிய போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின்படி அந்த சரக்குகளை பறிமுதல் செய்தனர்.

இதைத் தொடர்ந்து ஆமதாபாத், டெல்லி, சென்னை, காந்திதாம், மாண்டவி உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

ஹெரோயின் போதைப் பவுடர்கள் சோப்புக் கற்களுக்குள் மறைந்து வைக்கப்பட்டிருப்பதை அவை இடம்பெற்ற கன்டெய்னர்கள் இந்தியாவில் இறக்குமதி செய்ய ஏற்பாடு செய்த விஜயவாடாவைச் சேர்ந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் மற்றும் தம்பதி சுதாகர் மற்றும் துர்கா வைஷாலி சென்னையில் இருப்பதை அறிந்து அவர்களை அதிகாரிகள் கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கை இரு தினங்களுக்கு முன்பே ரகசியமாக மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பின்னர் அந்த தம்பதி கடந்த திங்கட்கிழமை குஜராத்தின் புஜ் நகரில் உள்ள போதைப் பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை பத்து நாட்களுக்கு காவலில் வைத்து விசாரிக்க சிறப்பு நீதிபதி சி.எம். பவார் அனுமதி அளித்துள்ளார். இதன் பிறகே இந்த கைது விவகாரம் மற்றும் போதைப் பொருள் கடத்தல் தகவலின் முழு விவரமும் தெரிய வந்துள்ளது.

வெளிநாட்டில் இருந்து இவ்வளவு பெரிய எண்ணிக்கை மற்றும் மதிப்பில் கடத்தப்பட்ட போதைப் பொருளை இந்திய அதிகாரிகள் சமீபத்திய ஆண்டுகளில் பறிமுதல் செய்திருக்கவில்லை.

ஆப்கானிஸ்தானில் ஆளும் அதிகாரத்தை தலிபான் கடந்த ஆகஸ்ட் மாதம் கைப்பற்றிய பிறகு அந்த நாட்டில் இருந்து இந்த போதைப் பொருட்கள் ஈரானுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

இந்த போதைப் பொருட்களை இந்தியாவில் அதுவும் விஜயவாடாவில் உள்ள ஒரு டிரேடிங் நிறுவனம் எந்த பின்புலத்தில் இறக்குமதி செய்தது, இதன் பின்னணியில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தெரிகிறது.

ஆப்கானிஸ்தானில் அதிகம் விளையும் போதைப் பொருள்
ஆப்கானிஸ்தானில் கடைசியாக ஆட்சியில் இருந்தபோது அபின் தயாரிப்பதற்குத் தேவையான பாப்பிச் செடிகளின் சாகுபடி நிறுத்தப்பட்டு விட்டதாகவும் சட்டவிரோத போதை மருந்துகளின் விற்பனை தடுக்கப்பட்டதாகவும் தலிபான் கூறுகிறது.

ஆனால் தலிபான் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் 2001 இல் அபின் பாப்பிச் செடிகளின் சாகுபடியில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டிருந்தாலும் அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிகரித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் எவ்வளவு அபின் உற்பத்தி செய்யப்படுகிறது?
அபின் பாப்பி செடிகளைப் பதப்படுத்தி ஹெரோயின் உட்பட பல போதை மருந்துகளுக்கு மூலப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள்.

போதை மற்றும் அது தொடர்பான குற்றத்திற்கான ஐக்கிய நாடுகள் அலுவல் அமைப்பின்படி (UNODC), உலகிலேயே அதிக அளவு அபின் உற்பத்தி செய்யப்படும் நாடாக ஆப்கானிஸ்தான் உள்ளது.

அபின் பற்றி தலிபான் கூறியிருப்பது என்ன?
"நாங்கள் ஆட்சியில்இருந்தபோது எந்தவிதமான போதை மருந்தும் தயாரிக்கப்படவில்லை" என்று காபூலை தலிபான்களை கைப்பற்றிய பிறகு அதன் செய்தித் தொடர்பாளர் ஸபியுல்லா முஜாஹித் கூறினார்.

"அபின் சாகுபடியை மீண்டும் பூஜ்ஜியத்திற்கு கொண்டு வருவோம்" என்றும் இனி போதைப் பொருள் கடத்தல் இருக்காது என்றும் அவர் கூறினார்.

தலிபான்களின் ஆட்சியில் போதைப் பொருள் நிலை என்ன?
முதலில், தலிபான் ஆட்சியில் அபின் பாப்பிச் செடிகளின் சாகுபடி கணிசமாக உயர்ந்தது. 1998 ஆம் ஆண்டில் சுமார் 41,000 ஹெக்டேர் இருந்து, 2000 ஆவது ஆண்டில் 64,000 ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பில் அபின் பாப்பிச் செடிகள் சாகுபடி செய்யப்பட்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவிக்கிறது.

இது பெரும்பாலும் தலிபான் கட்டுப்பாட்டில் உள்ள ஹெல்மாண்ட் மாகாணத்தில் பயிரிடப்பட்டது. இந்தப் பகுதியில் உற்பத்தி செய்யப்பட்டது மட்டும் உலகின் சட்டவிரோத அபினின் 39% ஆகும்.

ஆனால் 2000 ஆம் ஆண்டு ஜூலையில் தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் அபின் பாப்பி சாகுபடியைத் தடை செய்தனர்.

தலிபான் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் பாப்பி சாகுபடி முற்றிலுமாக தடை செய்யப்படுவதில் முழு வெற்றி கிடைத்ததாக ஐக்கிய நாடுகள் அவை 2001 ஆம் ஆண்டு வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியிருக்கிறது.

தலிபான்கள் அபின் பாப்பி விவசாயத்திற்கு தடை விதித்ததைத் தொடர்ந்து, உலகளவில் 2001 மற்றும் 2002 இல் அபின் மற்றும் ஹெரோயின் பிடிபடுவது கணிசமாகக் குறைந்தது. ஆயினும், அதன் பிறகு நிலைமை மாறிவிட்டது.

இதற்கு முன் இருந்த அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் அபின் பாப்பிச் செடிகளின் சாகுபடி கணிசமாக இருந்தது. ஆனால் தாலிபன்களின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில்தான் இது அதிகம்.

உதாரணமாக, தெற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெல்மாண்ட் மற்றும் கந்தஹார் மாகாணங்கள் தாலிபன்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகு, 2018ஆம் ஆண்டில் பாப்பி சாகுபடிக்கு அதிக அளவிலான நிலம் பயன்படுத்தப்பட்டது.

No comments:

Post a Comment