அமைச்சு பதவிகளை பெறப்போவதில்லை : சமூக பிரச்சினைகளுக்கான தீர்வே அவசியம் - நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவித்த முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர் ஹரீஸ் - News View

About Us

About Us

Breaking

Monday, August 16, 2021

அமைச்சு பதவிகளை பெறப்போவதில்லை : சமூக பிரச்சினைகளுக்கான தீர்வே அவசியம் - நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவித்த முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர் ஹரீஸ்

மாளிகைக்காடு நிருபர்

அமைச்சு பதவிகளையோ அல்லது இராஜாங்க அமைச்சுக்களையோ 20 க்கு ஆதரவளித்த முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களாகிய நாங்கள் நிபந்தனையாக முன்வைக்கவில்லை 20 தை ஆதரிக்க சமூகம் சார்ந்த பிரச்சினைகளையே அரசாங்கத்துடன் பேசினோம். முஸ்லிங்களுக்கு பாதகமாக அமைய இருந்த தனியார் சிவில் சட்ட திருத்தம் தொடர்பில் பேசி தீர்வை முன்வைத்தே 20 க்கு ஆதரவளித்தோமே தவிர அமைச்சு பதவிகளையோ அல்லது இராஜாங்க அமைச்சுக்களையோ நாங்கள் நிபந்தனையாக முன்வைக்கவில்லை. 20 க்கு ஆதரவளித்த முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் யாரும் அமைச்சுக்களை பெறப்போவதில்லை. பொறுப்பு வாய்ந்த மக்கள் பிரதிநிதிகளாக சமூகத்தின் பிரச்சினைகளை தீர்க்கவே முன்வந்துள்ளோம். 

அனர்த்த அரசியல் சூழ்நிலை எழுந்துள்ள இந்த காலகட்டத்தில் சர்வதேச விடயமாக நடந்து முடிந்த சஹ்ரானின் செயலினால் கூட முஸ்லிம் சமூகம் மிகப்பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. சமூகத்திற்கு சவாலொன்று வரும் போது கோழைகளாக ஓடியொழிய முடியாது. ஜனாதிபதியே அல்லது யாருடைய கதவையாவது தட்டி தீர்வை பெறுவதே எங்கள் எண்ணம் அதுவே எங்களின் தலைவர்களின் வழிகாட்டல் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.

தனியார் ஊடகமொன்றின் அரசியல் நிகழ்ச்சியொன்றில் திங்கட்கிழமை கலந்துகொண்டு பேசிய அவர் அங்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். 

தொடர்ந்து கருத்து வெளியிடுகையில் ராஜபக்ஸ அரசாங்கத்தின் மஹிந்த, கோத்தா போன்ற தலைவர்கள் இடதுசாரி கொள்கையை உடையவர்கள். இவர்களில் சிறுபான்மையினரின் பிரச்சினைகளை அறிந்த ஒருவராக நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஸ இருக்கிறார். அதனாலையே அது தொடர்பில் நாங்கள் அந்த முடிவை எடுத்தோம். 

20 ம் திருத்தம் என்பது புதிய விடயமல்ல. 19 இல் விளக்கப்பட்டவை 20 இல் பலப்படுத்தப்பட்டுள்ளது. இது பசிலுக்கான சட்டமூலமில்லை. யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த எத்தனையோ இலங்கையர்கள் வெளிநாட்டில் இரட்டை பிரஜாவுரிமை பெற்றுள்ளார்கள். அவர்களும் இலங்கை அரசியலில் ஈடுபட சாதகமாக இந்த சட்டமூலம் அமையும். சாதிக்கும் திறமை கொண்ட ஆளுமையானவர்கள் யாராக இருந்தாலும் இலங்கை அரசியலில் இருக்க வேண்டும்.

நாட்டின் சுற்றுலாத்துறை பாதிப்படைந்து, வரிகள் தடுமாற்றத்தை சந்தித்து இலங்கை நாணயம் வீழ்ச்சியை நோக்கி சென்ற போது புதிய நிதியமைச்சராக பசில் ராஜபக்ச அமைச்சை பொறுப்பேற்றார். நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப பல்வேறு நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகிறார். முரண்பட்டிருந்த பல நாடுகளுடனும் நல்லிணக்கத்தை உண்டாக்கி பல்வேறு அமைப்புக்களுடனும் உறவை வளர்த்து அந்நிய செலவாணியை நாட்டுக்கு கொண்டுவர முயற்சிக்கிறார். 

இதில் ஒழித்துமறைத்து பேச இங்கு எதுவுமில்லை. அவர் அரசியல் அரங்குக்கு வந்த பின்னர் பசிலுடன் பேச தமிழ் மக்களின் தரப்பும் தயாராக இருப்பதாக கூட்டமைப்பின் முக்கியஸ்தர் சுமந்திரன் அறிவித்துள்ளார். 

தமிழ், முஸ்லிம் மக்கள் சில விடயங்களில் புறக்கணிக்கப்படுகிறோம் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். இலங்கை அரசியலை புரிந்துகொண்டு நடப்பதே இப்போதைய அரசியல் சூழ்நிலைக்கு நல்லது என்றார்.

No comments:

Post a Comment