அதிபர், ஆசிரியர்கள் கொவிட்-19 வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் வீதிக்கிறங்கி போராடும் நெருக்கடியான சூழ்நிலையை அரசாங்கமே தோற்றுவித்துள்ளது. கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலத்தை நீக்குவதாகவும், ஆசிரியர், அதிபர் சம்பள பிரச்சினைக்கு ஏற்றுக் கொள்ள கூடிய தீர்வை வழங்கியிருந்தால் எவரும் போராட்டத்தில் ஈடுப்படமாட்டார்கள் என தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், ஆசிரியர்கள், அதிபர்கள் கொவிட் தாக்கத்துக்கு மத்தியில் வீதிக்கிறங்கி போராடவில்லை. அவர்களை அரசாங்கம் வீதிக்கிறக்கியுள்ளது.
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே தற்போது ஆசிரியர், அதிபர் சேவையில் சம்பளம் அதிகரிக்க முடியாது என்று அரசாங்கம் குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
பொருளாதார நெருக்கடி என்று குறிப்பிடும் போது பாராளுமன்ற உறுப்பினர்களுகளின் வரப்பிரசாதங்களுக்கும், அரசாங்கத்தின் தேவையற்ற செலவுகளுக்கும் குறையேதும் ஏற்படவில்லை.
பொருளாதார மட்டத்தில் ஆசிரியர்கள், அதிபர்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளார்கள். வாழ்க்கை செலவுகள் நாளாந்தம் அதிகரித்த வண்ணம் உள்ளது. மறுபுறம் நிகழ்நிலை முறைமை ஊடான கற்பித்தல் முறைமை இதற்கான எவ்வித வசதிகளையும் அரசாங்கம் ஆசிரியர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கவில்லை.
மாணவர்களின் நலன் கருதியே ஆசிரியர்கள் ஆரம்பத்தில் தன்னிச்சையாக நிகழ்நிலை முறைமை ஊடாக கற்பித்தலில் ஈடுப்பட்டார்கள். அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாட்டின் காரணமாக நிகழ்நிலை முறைமை ஊடாக கற்பித்தலில் இருந்து விலகியுள்ளார்கள் என்றார்.
No comments:
Post a Comment