மட்டக்களப்பில் பல நெற் களஞ்சியாசாலைகளுக்கு சீல் வைப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, August 29, 2021

மட்டக்களப்பில் பல நெற் களஞ்சியாசாலைகளுக்கு சீல் வைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான நெல் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மட்டக்களப்பு நகர், காத்தான்குடி, களுவாஞ்சிக்குடி, ஏறாவூர், ஒட்டமாவடி மற்றும் வாழைச்சேனை ஆகிய பிரதேசங்களில் உள்ள பதிவு செய்யப்படாத நெல் களஞ்சியசாலைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீது மட்டக்களப்பு மாவட்ட நுகர்வோர் அதிகார சபையினரால் திடீர் சுற்றிவளைப்பு கடந்த நான்கு நாட்களாக மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது பதிவு செய்யப்படாமல் நெல்லினை களஞ்சியப்படுத்தி பதுக்கி வைத்திருந்தமை தொடர்பாகவும், பல ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளை களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த களஞ்சியசாலைகளுக்கு சீல் வைக்கப்பட்டதுடன் உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

நெல்லினை பதுக்கி வைத்திருந்த சில வியாபாரிகள் தானாக முன்வந்து தங்களுடைய நெல்களை அரசாங்க நெல் சந்தைப்படுத்தும் அதிகார சபைக்கு வழங்கவும் உடன்பட்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே,கருணாகரனுக்கு கிடைத்த தகவலுக்கமைய அவர் நுகர்வோர் அதிகார சபைக்கு வழங்கிய அறிவுறுத்தலில் தெரிவித்துள்ளதாவது.

COVID-19 காரணமாக மக்கள் தனது வாழ்வாதாரத்தினை இழந்துள்ள நிலையில் மனிதாபிமானமின்றி ஒரு சில வியாபாரிகள் மக்களின் வாழ்வாதாரத்தையோ, அரசாங்கத்தின் நிருவாக நடைமுறையையோ கண்டு கொள்ளாமல் தங்களது வியாபார தந்திரோபாய நடவடிக்கைகளை முன்னெடுப்பதால் அந்நடவடிக்கைகளுக்கு எதிராக சட்ட வரையறைக்குட்பட்டு இறுக்கமான நடவடிக்கை எடுக்குமாறு நுகர்வோர் அதிகார சபை பணிப்பாளர் ஆர்.எப். அன்வர் சதாத்துக்கு ஆலோசணை வழங்கியிருந்தார்.

வியாபாரிகள் நுகர்வோரை சுரண்டுகின்ற மற்றும் அவர்களின் உரிமைகளை மீறுகின்ற எந்ந ஒரு செயற்பாட்டிலும் ஈடுபடுகின்ற வியாபாரிகளுக்கு எதிராக பாரபட்சம் பாராமல் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் மேலும் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை பணிப்பாளர் ஆர்.எப். அன்வர் சதாத் தெரிவித்தார்.

பொருட்களினை விற்பனை செய்யும் போது நுகர்வோருக்கு நிபந்தனை விதிப்பது, மேலதிக கட்டணங்கள் அறவிடுவது, பொருட்களினை பதுக்கி வைப்பது தொடர்பாக பொதுமக்களினால் நுகர்வோர் அதிகார சபைக்கும், அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருக்கும் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதை அடுத்து அரசாங்க அதிபரினால் கிழக்கு மாகாண உதவிப்பணிப்பாளரும் மட்டக்களப்பு மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின் மாவட்ட பொறுப்பதிகாரியுமான ஆர்.எப். அன்வர் சதாத்துக்கு வழங்கிய அறிவுறுத்தலுக்கும் பணிப்புரைக்கும் அமைவாக மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரி தலைமையில் மாவட்டம் பூராகவும் குறித்த குழுவினரால் திடீர் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வியாபார நுகர்வோர் அதிகார சபையின் சட்டத்தினை மீறிய வியாபார நிலையங்களுக்கு எச்சரிக்கை அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதுடன், மேலும் ஒரு சில வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின் மாவட்ட பொறுப்பதிகாரி அன்வர் சதாத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

(எஸ்.எம்.எம். முர்ஷித்)

No comments:

Post a Comment