(எம்.எம்.சில்வெஸ்டர்)
கொவிட் தொற்றாளர்கள் போதிய கட்டில் வசதியில்லாமல் காணப்படுவதால், அவர்கள் சிகிச்சைப் பெறுவதற்கு பிரிதொரு சிகிச்சையறையொன்றை (WARD) தயார்படுத்தி, அவர்களை அங்கே அனுமதித்துக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் ராகம போதானா வைத்திசாலை பணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
ராகம போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றாளர்களின் அதிகரிப்பு காரணமாக அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளர்கள் போதியளவு கட்டில்கள் இல்லாமையால் தரைகளில் உறங்கியிருந்தமை சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்தன.
இந்த விடயத்தை கவனத்தில் எடுத்துக் கொண்ட சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, நேற்று (04) ராகம போதனா வைத்தியசாலைக்குச் சென்றார். அங்கு, கொவிட் தொற்றாளர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகளை அவதானித்ததுடன், அங்கு நிலவுகின்ற பிரச்சினைகள் தொடர்பிலும் கண்டறிந்து கொண்டார்.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர், "வைத்தியசாலைகளில் அளிக்கப்பட்டு வரும் கொரோனா தொற்று சிகிச்சைக்களை கண்கானிப்பதற்காக நாம் வைத்தியசாலைகள் பலவற்றுக்கும் செல்வதுண்டு. அந்த வயைிலேயே ராகம வைத்திசாலைக்கும் வருகை தந்தோம்.
கொரோனா தொற்றாளர்கள் வைத்தியசாலைகளுக்கு அனுமதிக்கப்பட்டதன் பின்னர், முதலாவதாக தொற்றாளர்களை அனுமதிக்கப்படுவதற்காக தனியான சிகிச்சை அறை உள்ளது. தொற்றாளர்கள் அனைவரும் அந்த சிகிச்சை அறையிலேயே முதலில் அனுமிக்கப்படுவர்.
வைத்தியர்களது கண்காணிப்பையடுத்தே, தொற்றாளர்கள் அவசர சிகிச்சை பிரிவுக்கா, இடைநிலை சிகிச்சைப் பிரிவுக்கா, சாதாரண சிகிச்சைப் பிரிவுக்கா அல்லது வீடுகளில் சிகிச்சைகளை பெறுவதா என்பது குறித்து தீர்மானிக்கப்படுவர் " என்றார்.
"ஒரு சில சிகிச்சை அறைகளில் கொரோனா தொற்றாளர்கள் இருப்பதைக் காட்டிக் கொண்டு ஒட்டு மொத்த கொரோனா தொற்றாளர்களும் ஒரே சிகிச்சை அறையில் அனுமதிக்கப்பட்டிருப்பது போன்ற கருத்தை சில தினங்களுக்கு முன்னர் சமூக ஊடங்களில் வெளியிடப்பட்டிருந்தமை வேடிக்கையாகவுள்ளது.
கொவிட் தொற்றாளர்கள் போதிய கட்டில் வசதியில்லாமல் காணப்படுவதால், அவர்கள் சிகிச்சைப் பெறுவதற்கு பிரிதொரு சிகிச்சை அறையை (WARD) தயார்படுத்தி, அவர்களை அங்கே அனுமதித்துக்குமாறு ராகம போதானா வைத்திசாலை பணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளேன்" என சுகாதார அமைச்சர் என்றார்.
No comments:
Post a Comment