(இராஜதுரை ஹஷான்)
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் நாடு பொருளாதார மட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஏனைய சலுகைகள் குறைக்கப்படவில்லை. இருப்பினும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபடுவது எந்தளவிற்கு நியாயமானது என்பதை நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, அமரபுர மாநாயக்க தேரரிடம் தெரிவித்தார்.
தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் நாடு என்ற ரீதியில் அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து பயணிக்காவிடின் பாரிய நெருக்கடியினை எதிர்கொள்ள நேரிடும் என அமரபுர மாநாயக்க தேரர் அமைச்சருக்கு ஆலோசனை வழங்கினார்.
அமரபுர மாநாயக்க தேரர் தொடம்பஹல சந்திரசிறி தேரரை நேற்று சந்தித்து ஆசீர்வாதம் பெற்ற போது அமைச்சர் சரத் வீரசேகர மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பூகோளிய மட்டத்தில் தாக்கம் செலுத்தியுள்ள கொவிட்-19 வைரஸ் தாக்கத்தில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்கவும், பொருளாதார நிலைமையினை சீர் செய்யவும் அரசாங்கம் ஆரம்பத்திலிருந்து பொறுப்புடன் செயற்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் தேசிய பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அனைவரும் நன்கு அறிவார்கள்.
பொருளாதாரம் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது என்ற காரணத்தினால் அரச ஊழியர்களுக்கு வழங்கும் மாத சம்பளம் மற்றும் ஏனைய சலுகைகள் ஆகியவற்றில் எவ்வித தாமதமும் ஏற்படவில்லை. உரிய காலத்தில் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறான பின்னணியில் ஒரு தரப்பினர் குறுகிய அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு போராட்டங்களில் ஈடுப்படுகிறார்கள்.
மேலும், அனைத்து தரப்பினருக்கும் பொருளாதார நெருக்கடி காணப்படுகிறது என்பதை ஏற்றுக் கொள்கிறோம் என்றார்.
No comments:
Post a Comment