எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் காங்கேயனோடை பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை (31) மாலை சிறுவன் ஒருவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காங்கேயனோடை பத்ர் பள்ளிவாசல் வீதியில் உள்ள சிறுவனின் வீட்டிலேயே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
முகமட் ரிபாஸ் முகம்மட் ரிழ்பான் எனும் இச் சிறுவனுக்கு இன்னும் மூன்று வயது பூர்த்தியாகவில்லை.
சம்பவ தினமான சனிக்கிழமை மாலை சிறுவனின் தாய் குளிப்பதற்காக சென்றுள்ளார். குளித்து விட்டு வந்த போது சிறுவன் வீழ்ந்து கிடப்பதையும் அருகில் மேசை மின்விசிறியும் (Table Fan) விழுந்து கிடப்பதையும் சிறுவனின் ஒரு கை மேசை மின்விசிறி பக்கமாக சாய்ந்து கிடந்ததையும் கண்டு கதறி அழுதுள்ளார்.
இதனையடுத்து குடும்பத்தினர் மற்றும் அயலவர்களின் உதவியுடன் சிறுவனை முச்சக்கர வண்டியில் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது அல்லது அதற்கு முன்னரே சிறுவன் மரணித்திருக்க வேண்டும் என்று கூறப்படுகின்றது.
தாய் குளிப்பதற்காகச் சென்ற போது சிறுவன் வீட்டிலிருந்த மேசை மின் விசிறியில் கையை வைத்துள்ளார். அதனால் மின்சாரம் தாக்கப்பட்டு கீழே விழுந்த சிறுவன் உயிரிழந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.
அந்த மேசை மின் விசிறியின் பின் பக்கத்திற்கு மூடியில்லை. அதில் கையை வைத்தால் மின்சாரம் தாக்க கூடிய வாய்ப்புக்கள் அதிகமாக காணப்பட்டன.
இதில் சிறுவன் கையை வைத்த போது மின்சாரம் தாக்கி வீழ்ந்து உயிழிந்துள்ளதாகவே விசாரணைகளிலிருந்து தெரிய வருகிறது.
இச் சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டதையடுத்து காத்தான்குடி பொலிசார் ஆரம்பக்கட்ட விசாரணைகளை மேற்கொண்டனர்.
ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையிருந்து சிறுவனின் ஜனாஸா மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சட்ட வைத்திய அதிகாரியினால் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு திங்கட்கிழமை பிற்பகல் ஜனாஸா உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
மின்சாரம் தாக்கியதிலே சிறுவன் உயிரிழந்ததாக சட்ட வைத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக உறவினர்கள் கூறுகின்றனர்.
சிறுவனின் ஜனாசா காங்கேயனோடைக்கு கொண்டு வரப்பட்டு காங்கேயனோடை பத்ர் பள்ளிவாயலில் தொழுகை நடாத்தப்பட்டு காங்கேயனோடை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவர் இப் பெற்றோரின் ஒரே ஒரு பிள்ளையாவார். எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் இச் சிறுவனின் மரணம் குடும்பத்தினரையும் அயலவர்களையும் மிகுந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது.
வறுமையான குடும்ப பின்னணியைக் கொண்ட இச் சிறுவனுக்கு 2 வயதில் ஏற்பட்ட வலிப்பு நோய் காரணமாக 7 வயது வரைக்கும் சிறுவனை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என வைத்தியர்கள் அறிவுரையும் ஆலோசனையும் கூறியதாகவும் அறியமுடிகிறது.
அதே போன்று இச் சிறுவன் சில மாதங்களுக்கு முன்பு விபத்தொன்றினாலும் உபாதையாகியுமுள்ளார்.
பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர் எந்நேரமும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும் என்பதையே இச் சம்பவம் உணர்த்துகிறது. அத்துடன் மின்சாரம் தாக்கக் கூடியவாறு மின்சாதனப் பொருட்களை வீடுகளில் வைத்திருப்பதும் தவிர்க்கப்பட வேண்டியதாகும்.
ஏதுமறியாத சிறுவர்களுக்கு அதன் மூலம் உயிராபத்துகள் கூட ஏற்படலாம் என்பதே இந்தச் சம்பவத்தின் மூலம் நாம் கற்க வேண்டிய பாடமாகும்.
No comments:
Post a Comment