ஊரடங்கு சட்டத்தின் தோல்வியை வீதிகளில் காணப்படும் வாகன நெரிசல் ஊடாக விளங்கிக் கொள்ளலாம் : அரசாங்கத்தின் கருத்துக்களால் மனித உயிர்கள் எந்தளவிற்கு மதிப்பிடப்பட்டுள்ளது என்பதை அறிய முடிகிறது - சஜித் பிரேமதாஸ - News View

About Us

About Us

Breaking

Friday, August 27, 2021

ஊரடங்கு சட்டத்தின் தோல்வியை வீதிகளில் காணப்படும் வாகன நெரிசல் ஊடாக விளங்கிக் கொள்ளலாம் : அரசாங்கத்தின் கருத்துக்களால் மனித உயிர்கள் எந்தளவிற்கு மதிப்பிடப்பட்டுள்ளது என்பதை அறிய முடிகிறது - சஜித் பிரேமதாஸ

(இராஜதுரை ஹஷான்)

கொவிட் வைரஸ் தொற்று இருந்தாலும், இல்லாவிடினும் நாட்டில் ஒரு நாளைக்கு 200 பேர் வரை உயிரிழப்பார்கள் என சுகாதார அமைச்சர் மரணங்களை பொதுமைப்படுத்தியுள்ளதும், கொவிட் என்பது கொடிய நோயல்ல சாதாரண காய்ச்சல் என ஆளும் தரப்பினர் குறிப்பிடுவதும் அரசாங்கம் நாட்டு மக்களின் மீது கொண்டுள்ள அக்கறையை வெளிப்படுத்தியுள்ளது. ஊரடங்கு சட்டத்தின் தோல்வியை வீதிகளில் காணப்படும் வாகன நெரிசல் ஊடாக விளங்கிக் கொள்ளலாம் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, கொவிட்-19 வைரஸ் தொற்றின் மூலாரம்பமாக கருதப்படும் சீனாவை காட்டிலும் இலங்கையில் தற்போது கொவிட் தாக்கத்தினால் பதிவாகும் மரணங்களின் எண்ணிக்கை சுமார் 9,000 ஆயிரத்தை அண்மித்துள்ளது.

கொவிட் வைரஸ் தொற்றினால் மரணித்தவர்களில் முன்னணி தொழில் வல்லுநர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், சாதாரண குடிமக்கள் மற்றும் இந்த நாட்டின் எதிர்கால பாதுகாவலர்களாக உள்ள ஏராளமான சிறு குழந்தைகளும் உள்ளடங்குகின்றனர்.

என் அன்புத் தந்தையின் அகால மரணத்தின் அதிர்ச்சியை நான் இன்னும் அனுபவித்து வருகிறேன். முன்கூட்டியே இறந்த அனைவரின் அன்புக்குரியவர்கள் அனுபவிக்கும் அதிர்ச்சியைப் பற்றி அதீத புரிதல் உள்ளது.

கடந்த வாரத்தில் 4000 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றுக்கள் பதிவாகியுள்ளதோடு அனைத்து மருத்துவ நிபுணர்களின் கணிப்புகளையும் உறுதிப்படுத்தும் விதமாக தினசரி இறப்புகளின் எண்ணிக்கை 200 கடந்துள்ளது.

இவ்வாறான நிலையில் சுகாதார அமைச்சர் கொரோனா இறப்புகளை பொதுமைப்படுத்தியுள்ளார். தற்போது கொவிட் தொற்று இருந்தாலும், இல்லாவிட்டாலும் தினமும் 200 க்கும் மேற்பட்ட மரணங்கள் நாட்டில் பதிவாகும் என குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு நாளும் இத்தகைய எண்ணிக்கையிலான பலர் இறந்துபோகும் போதும் இந்த பேரழிவைப் பற்றி உலகம் முழுவதும் கவலைப்படுகையில் அரசாங்கத்தில் உள்ள சிலர் கொரோனா வைரஸ் ஒரு சிறிய தடுமல் நோய் போன்று சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றே கூறுகிறார்கள்.இந்தக் கருத்துக்கள் மூலம் மனித உயிர்களை அரசாங்கம் எந்த அளவிற்கு மதிப்பிட்டுள்ளது என்பதை அறிய முடிகிறது.

No comments:

Post a Comment