கல்முனைப் பிராந்தியத்தில் மேலும் 81 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள அதேவேளை, நால்வர் உயிரிழந்துள்ளனர் என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுணன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 13 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளை உள்ளடக்கிய கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை நிர்வாகப் பிரிவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வருகின்றனர்.
நேற்று புதன்கிழமை (04) முற்பகல் 10.00 மணி வரையான 24 மணித்தியாலயத்தில் 81 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். இது முந்திய நாட்களுடன் ஒப்பிடுகையில் அதிகரிப்பு வீதம் மிகக் கூடியதாகும்.
இவர்களுள் ஆகக்கூடிய தொற்றாளர்கள் கல்முனை வடக்கு சுகாதாரப் பிரிவில் இருந்து 21 பேர் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். நிந்தவூர் சுகாதாரப் பிரிவில் 13 பேரும், பொத்துவில் சுகாதாரப் பிரிவில் 09 பேரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
அத்துடன் கொரோனா தொற்று காரணமாக கல்முனைப் பிராந்தியத்தில் ஒரே நாளில் நால்வர் உயிரிழந்திருக்கின்றனர். இது மிகவும் எச்சரிக்கைக்குரிய விடயமாகும்.
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த 53 வயதுடைய பெண் ஒருவரும், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த, அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த 76 வயதுடைய ஆண் ஒருவரும், பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த, பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த 62 வயதுடைய ஆண் ஒருவரும் திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதன்படி கல்முனைப் பிராந்தியத்தில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது. அதேவேளை இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 4118 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களுள் தற்போது 429 பேர் வைத்தியசாலைகளிலும் கொவிட் சிகிச்சை நிலையங்களிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் 2104 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுணன் மேலும் தெரிவித்தார்.
(கல்முனை விசேட நிருபர்)
No comments:
Post a Comment