கொவிட் தொற்றினால் உயிரிழக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அரசாங்கம் தடுப்பூசியை வழங்கவில்லை என்பதே உண்மை - எஸ்.எம். மரிக்கார் - News View

About Us

About Us

Breaking

Saturday, August 21, 2021

கொவிட் தொற்றினால் உயிரிழக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அரசாங்கம் தடுப்பூசியை வழங்கவில்லை என்பதே உண்மை - எஸ்.எம். மரிக்கார்

எம்.மனோசித்ரா

நாட்டில் கொவிட் தொற்றினால் உயிரிழக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் பெருமளவானோர் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாதவர்கள் என்று அரசாங்கம் கூறுகிறது. இவர்கள் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாமல் இறக்கவில்லை. அவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவில்லை என்பதே உண்மையாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்திற்கு முன்னுரிமையளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தண்ணீர் குடத்தை ஆற்றில் எறிந்த போதும், தம்மிக பாணியை பிரச்சித்தப்படுத்திய போது மூட நம்பிக்கைகளின் பின்னால் செல்லாமல் தடுப்பூசியை விரைவாக கொள்வனவு செய்யுமாறு நாம் வலியுறுத்தினோம். ஆனால் அதனை கவனத்தில் கொள்ளாமல் அரசாங்கம் எம்மை விமர்சித்தது. இந்தியாவிடமிருந்து முதற்கட்டமாக தடுப்பூசியை கொள்வனவு செய்த போதே மேலதிக தடுப்பூசிகளைப் பெற்றிருந்தால் சிக்கல் ஏற்பட்டிருக்காது.

தற்போது தடுப்பூசி வழங்கும் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்படுகிறது என்று ஜனாதிபதி கூறுகின்றார். ஆனால் வினைத்திறனாக முன்னெடுக்கப்படுகிறதா? உலக நாடுகளில் முதற்கட்ட தடுப்பூசி பெற்றுக் கொண்டோர் இரண்டாம் கட்ட தடுப்பூசி பெற்றுக் கொண்டோருக்கிடையில் 10 இலட்சம் என்ற வித்தியாசமே காணப்படுகிறது. ஆனால் இலங்கையில் அவ்வாறல்ல.

ஜனாதிபதி தனது உரையில் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கும் பணிகளுக்கு முன்னுரிமையளித்த முதல் நாடு இலங்கை என்று குறிப்பிட்டார். அந்த தீர்மானத்தின் காரணமாகவே இன்று 60 வயதுக்கும் மேற்பட்ட பலரும் நாளாந்தம் கொவிட் தொற்றால் இறந்து கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறு 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் உயிரிழப்பவர்கள் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளவில்லை என்று கூற முடியாது. அவர்களுக்கு தடுப்பூசி கிடைக்கப் பெறவில்லை. எனவே இவர்களின் மரணத்திற்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment