(லியோ நிரோஷ தர்ஷன்)
அடுத்து வரும் 6 வாரங்கள் இலங்கைக்கு ஆபத்துமிக்கது. எனவே சுகாதார வழிக்காட்டில்களை பின்பற்றி மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும். மேல் மாகாணத்தில் 60 வைத்திய நிபுணர்கள் மற்றும் 200 வைத்தியர்கள் கொண்ட சிறப்பு குழு அறிகுறியற்ற தொற்றாளர்களை வீடுகளில் வைத்து சிகிச்சையளித்து வருவதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.
இரண்டு தடுப்பூசிகளையும் வழங்கி விட்டால், உயிரிழப்புகளை குறைக்கலாம் என்பது சுகாதார தரப்புகளின் கணிப்பாவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஊடகங்களின் பிரதானிகளுடன் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில், நாட்டின் தற்போதைய நிலைமை என்னவென்பது அனைவருக்கும் தெரிந்த விடயமாகும் . அதனை எதிர்கொள்ள மக்களை கூடிய வகையில் சுகாதார பாதுப்பு வழிமுறைகளை பின்பற்ற ஊக்குவிக்க வேண்டும்.
இலங்கைக்கு அடுத்து வரும் 6 வாரங்கள் என்பது சவால் மிக்கதாகும். முகக் கவசம் அணியாத நாடுகளும் உள்ளன. அவ்வாறா நாடுகளின் சனத் தொகையில் சுமார் 60 வீதமானோர் முழுமையாக தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டுள்ளனர்.
அந்த வகையில் இலங்கையை பொறுத்த வரையில் 51 வீதமானோருக்கு முதலாம் கட்ட தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடுப்பகுதியில் இரண்டாம் கட்ட தடுப்பூசிகளை வழங்க முடியும். இந்த காலக்கட்டம்தான் மிக நெருக்கடியானது.
ஏற்படக்கூடிய மரணங்களை தவிர்க்க அரசாங்கம் முழுமையாக கவனம் செலுத்தி செயற்படுகின்றது. தொற்றாளர்களில் 80 வீதமானோருக்கு எவ்வித நோய் அறிகுறிகளும் காணப்படுவதில்லை. இது மிகவும் ஆபத்தான நிலைமையாகும் என்றார்.
No comments:
Post a Comment