நோயாளிகள் அதிகரிப்பால் கதிகலங்கி நிற்கும் கல்முனைப் பிராந்தியம், இடமின்றி 50 பேர் வீடுகளில் : மாமாங்கம் கோவிலுக்கு சென்ற அனைவரையும் தனிமைப்படுத்த வேண்டும் என்கிறார் டாக்டர் சுகுணன் - News View

About Us

About Us

Breaking

Sunday, August 8, 2021

நோயாளிகள் அதிகரிப்பால் கதிகலங்கி நிற்கும் கல்முனைப் பிராந்தியம், இடமின்றி 50 பேர் வீடுகளில் : மாமாங்கம் கோவிலுக்கு சென்ற அனைவரையும் தனிமைப்படுத்த வேண்டும் என்கிறார் டாக்டர் சுகுணன்

நூருல் ஹுதா உமர்

நாட்டில் வேகமாகப் பரவி வரும் கொவிட் நோய்த் தாக்கத்தினால் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் கல்முனைப் பிராந்திய வைத்தியசாலைகள் கொவிட் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. அங்குள்ள கட்டில்கள் அனைத்திலும் நோயாளிகள் நிறைந்திருப்பதால் இடநெருக்கடி சிக்கல் தோன்றியுள்ளது. 

சில வைத்தியசாலைகளில் குறிப்பாக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை, அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை போன்றவற்றில் கொரோணா நோயாளிகளுக்கான சிகிச்சை பிரிவில் புதிய நோயாளிகள் தரையில் அமர்ந்து சிகிச்சை பெறவேண்டிய துர்ப்பாக்கிய நிலையிலுள்ளனர்.

இது குறித்து கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் டாக்டர் ஜி.சுகுணன் கருத்து தெரிவிக்கையில் பிராந்தியத்திலுள்ள சகல கொரோனா இடைத்தங்கல் நிலையங்கள் மற்றும் வைத்தியசாலைகளிலுள்ள கொவிட் சிகிச்சை நிலையங்கள் அனைத்திலும் கொவிட் தொற்று நோயாளிகள் நிரம்பி வழிவதால் சுமார் 50 நோயாளிகள் இடமில்லாமல் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் கல்முனைப் பிராந்தியம் மீண்டும் கதிகலங்கி நிற்கும் நிலை எழுந்துள்ளது.

கொவிட் நோயாளிகள் அதிகரித்துக் கொண்டு போவதால் காரைதீவு, சாய்ந்தமருது வைத்தியசாலைகளையும் கொவிட் சிகிச்சை நிலையமாக மாற்ற திட்டமிட்டுள்ளோம். 

இதேவேளை இடைத்தங்கல் நிலையங்கள் முறைமையை ஒழித்து அவற்றையும் சிகிச்சை நிலையங்களாமாக மாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதாவது குணங்குறிகளற்ற நோயாளிகள் அந்தந்த சுகாதார வைத்திய அதிகாரி கண்காணிப்பில் இனிமேல் வீடுகளில் தனிமைப்படுத்தப்படவுள்ளனர்.

அண்மைக்காலமாக கொவிட் தொற்றுக்குள்ளாவோரில் 10 வீதமானோர் வைத்தியசாலை சிகிச்சை நிலையங்களில் அனுமதிக்கப்பட்டு வந்தனர். ஆனால் கடந்த 3 தினங்களாக 50 வீதமானோர் இவ்விதம் வைத்தியசாலைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.

எனவே, இது டெல்டா வைரஸ் திரிபாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனவே நாம் கல்முனை பொத்துவில் நிந்தவூர் அக்கரைப்பற்று பகுதிகளில் எடுக்கப்பட்ட மாதிரிகளை ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திற்கு ஆய்வுக்காக அனுப்பியுள்ளோம். 

அம்பாறை மாவட்டத்திற்குள் கல்முனைப் பிராந்தியமும் வருகிறது. மூவினங்களும் அடர்த்தியாக வாழ்ந்து வருகின்ற அம்பாறை மாவட்டத்தில் இந்த டெல்டா திரிபு வைரஸ் மிக இலகுவாக பரவவாய்ப்புண்டு.

எனவே மக்கள் முதலாவது தடுப்பூசி போட்டுவிட்டோம் என்ற அலட்சியத்துடன் இருந்துவிடாது சுகாதார நடைமுறைகளை மிகவும் இறுக்கமாகப் பேணி தஙகளைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ளுங்கள். 

கடந்த ஒரு சில நாட்களாக வழமைக்குமாறாக எமது பிரதேசத்தில் தொற்றுக்களின் எண்ணிக்கையும் மரணங்களும் அதிகரித்து வருகின்றன. இங்கும் ‘டெல்டா’ வராது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. 

எனவே சுகாதாரத்துறையை மாத்திரம் நம்பியிராது சுகாதார நடைமுறைகளை முறைப்படி கடைப்பிடித்து முடியுமானவரை வீட்டிலிருங்கள் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி சுகுணன் தெரிவித்துள்ளார்.

மேலும் மாமாங்கம் கோவிலுக்கு சென்ற அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படல் வேண்டும். அரச உத்தியோகத்தர்களாயின் அவர்களின் சொந்த லீவில் கழிக்கப்பட வேண்டும் என்பதுடன் சட்ட நடவடிக்கை கோயில் தருமகத்தா, குருக்கள்மார், கோயில் நிருவாகம் அனைத்துக்கும் எதிராக எடுக்கப்படல் வேண்டும்.

கோயில் சுற்றுவட்டாரத்தில் அன்டிஜன் பரிசோதனை அதிகளவு செய்யப்பட்டு அதிகளவு நோயாளிகள் காணப்பட்டால் பிரதேசம் முடக்கப்பட்டு அப்பாவி மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். என்று தெரிவித்துள்ள கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் குணசிங்கம் சுகுணன் ஒரு சைவ சமயத்தவனாக அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு கொள்வதாக அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment