இதுவரை முதலாவது தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாத கொழும்பில் வசிக்கும் 30 வயதுக்கு மேற்பட்டவர்களை, சுகததாச விளையாட்டரங்கிற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இன்றையதினம் (07) சுகததாச விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தடுப்பூசி மையத்தில் அவர்களுக்கான தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
தடுப்பூசி பெற விருப்பமின்மை, அது தொடர்பான உரிய விழிப்புணர்வு இன்மை, அவர்களால் தடுப்பூசி நிலையத்தை அடைவதில் உள்ள சிக்கல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கொழும்பிலுள்ள பலர் இதுவரை முதலாவது தடுப்பூசியை பெறவில்லை என அடையாளம் காணப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்தார்.
இவ்வாறான நபர்களை அடையாளம் காணும் நடவடிக்கையை பிரஜா பொலிஸ் பிரிவு முன்னெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் இவ்வாறு அடையாளம் காணப்பட்ட சுமார் 5,000 பேருக்கு, சுகததாச விளையாட்டரங்கிற்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment