கிழக்கு மாகாணத்தில் கொரோனா 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது - இதுவரை 364 பேர் பலி - 6 இலட்சத்து 65 ஆயிரத்து 349 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டது - News View

About Us

About Us

Breaking

Tuesday, August 3, 2021

கிழக்கு மாகாணத்தில் கொரோனா 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது - இதுவரை 364 பேர் பலி - 6 இலட்சத்து 65 ஆயிரத்து 349 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டது

கிழக்கு மாகாணத்தில் கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரித்திருக்கிறது. மூன்றாவது அலையின் ஆரம்பத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய பிரதேசங்கள் அபாயகரமாக மாறியிருந்தது. இடைநடுவில் சற்று தணிந்திருந்தபோதிலும் கடந்த இரு வார காலமாக அந்நிலைமை மாறி தற்போது வேகமாக தாக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக கல்முனை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய பிரதேசங்களில் கூடுதலான தாக்கத்தை செலுத்த ஆரம்பித்துள்ளது.

தொற்றுக்களின் எண்ணிக்கை நேற்று (02) திங்கட்கிழமை 20 ஆயிரத்து 21 ஆக உயர்ந்துள்ளது என கிழக்கு மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் டொக்டர் ஏ.ஆர்எம்.தௌபீக் தெரிவித்தார். 

கிழக்கில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 350 ஐ தாண்டியுள்ளது. அங்கு இதுவரை 364 பேர் பலியாகியுள்ளனர். இவர்களில் 339 பேர் மூன்றாவது அலையில் மரணித்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மட்டு. மாவட்டத்தில் 103 பேரும், அம்பாறை பிராந்தியத்தில் 39 பேரும், திருமலை மாவட்டத்தில் 148 பேரும், கல்முனைப் பிராந்தியத்தில் 74 பேரும் மரணித்துள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் தடுப்பூசிக்கு தகுதி பெற்றவர்களாக 10 இலட்சத்து 40 ஆயிரத்து 471 பேர் உள்ளனர். இதுவரை 6 இலட்சத்து 65 ஆயிரத்து 349 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதென அவர் தெரிவித்தார். 

மட்டு. மாவட்டத்தில் 227,953 பேருக்கும், அம்பாறை பிராந்தியத்தில் 112,089 பேருக்கும், திருமலை மாவட்டத்தில் 163,863 பேருக்கும், கல்முனைப் பிராந்தியத்தில் 161,444 பேருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 

இதேவேளை கிழக்கு மாகாணத்திற்கு இதுவரை 8 இலட்சத்து 50 ஆயிரம் தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவற்றில் முதலாவது டோசாக 7 இலட்சத்து 75 ஆயிரம் தடுப்பூசிகளும் இரண்டாவது டோசாக 75 ஆயிரம் தடுப்பூசிகளும் கிடைக்கப் பெற்றன. 

இவற்றில் முதலாவது டோஸில் கிழக்கு மாகாணத்திற்கென வழங்கப்பட்ட 7 இலட்சத்து 75 ஆயிரம் சைனோபாம் தடுப்பூசிகளில் 5 இலட்சத்து 94 ஆயிரத்து 238 ஊசிகள் ஏற்றப்பட்டுள்ளதென அவர் மேலும் தெரிவித்தார். 

மட்டு. மாவட்டத்தில் 204,406 பேருக்கும் அம்பாறை பிராந்தியத்தில் 89,485 பேருக்கும், திருமலை மாவட்டத்தில் 138,903 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளன. 

இறுதியாக கிடைக்கப் பெற்ற கல்முனைப் பிராந்தியத்தில் முதல் டோசாக இதுவரை 1 இலட்சத்து 61 ஆயிரத்து 44 பேருக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன.

(காரைதீவு, ஒலுவில் விசேட நிருபர்கள்)

No comments:

Post a Comment