விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்தை கூட்டுறவுத் துறையால் முன்னெடுக்க முடியும் : ஜனாதிபதி கோட்டாபய தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, July 5, 2021

விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்தை கூட்டுறவுத் துறையால் முன்னெடுக்க முடியும் : ஜனாதிபதி கோட்டாபய தெரிவிப்பு

விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் நிவாரணங்களை வழங்கும் விரிவான வேலைத்திட்டத்தை, கூட்டுறவு இயக்கத்தினால் மேற்கொள்ள முடியுமென்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

விவசாயிகளின் உற்பத்திகளை நேரடியாகக் கொள்வனவு செய்து, தமக்கான இலாபத்தை வைத்துக்கொண்டு, நுகர்வோருக்கு அவற்றை நிவாரண விலைக்குப் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையில், கூட்டுறவுத்துறை தலையிட முடியுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வீழ்ச்சியடைந்துள்ள கூட்டுறவு இயக்கத்தை, இதன் மூலம் திறந்த பொருளாதாரத்துடன் கட்டியெழுப்புவதற்கும் அனர்த்த நிலைமைகளின் போது பாரியதொரு சமூகப் பொறுப்பை நிறைவேற்றவும் முடியுமென்று, ஜனாதிபதி சுட்டிகாட்டினார்.

உலகெங்கிலும் உள்ள 112 நாடுகளில், கூட்டுறவு இயக்கம் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதத்தில் வரும் முதலாவது சனிக்கிழமையன்று, சர்வதேச கூட்டுறவுத் தினமாக கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு, இன்று (05) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற 99ஆவது சர்வதேசக் கூட்டுறவு தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உலகின் பல நாடுகளினது உற்பத்திகளை விநியோகிக்கும் மக்கள்நேயப் பொறிமுறையாகவே, இந்தக் கூட்டுறவுத் துறை செயற்படுகின்றது. மக்கள்நேய அரசாங்கங்கங்கள் ஆட்சியில் இருந்த அனைத்துச் சந்தர்ப்பங்களிலும், நாட்டின் கூட்டுறவு இயக்கமும் பலமானதாக இருந்தது. மக்கள்மையப் பொருளாதாரத் தொலைநோக்கினூடாகக் கூட்டுறவுத் துறையைப் பலப்படுத்துவதற்கு, “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட 9 அம்ச முன்மொழிவை நடைமுறைப்படுத்துவதாகவும், இதன்போது ஜனாதிபதி தெரிவித்தார்.

அரசாங்கம் திட்டமிட்டுள்ள சேதனப் பசளை மற்றும் சூரிய மின்சக்தி நிகழ்ச்சித் திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கும், கூட்டுறவுத் துறையால் விரிவான பங்களிப்பை வழங்க முடியுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன ஆகியோர், கிராமிய மற்றும் நகர மக்களுக்காக கூட்டுறவு இயக்கம் நீண்ட காலமாக முன்னெடுத்து வரும் பணிகளைப் பாராட்டினர்.

இதன்போது, பல்வேறு சேவைகள் மற்றும் உற்பத்திகளில் பங்களிப்புச் செய்த சனச சங்கங்களைக் கௌரவிக்கும் வகையில், அவற்றினது செயலாற்றுகையின் அடிப்படையில் அதிக புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட 21 கூட்டுறவுச் சங்கங்களுக்கு, ஜனாதிபதியினால் தங்க விருதுகள் வழங்கப்பட்டன.

மாகாண ஆளுநர்கள், ஜனாதிபதியின் செயலாளர் உட்பட, அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளும், இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment