ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கான உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டியது கட்டாயம் - மங்கள சமரவீர - News View

About Us

About Us

Breaking

Friday, July 9, 2021

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கான உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டியது கட்டாயம் - மங்கள சமரவீர

நா.தனுஜா

நான் அமைச்சராகப் பதவி வகித்த காலப்பகுதியில் தினமும் அமைச்சிற்கு முன்னால் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. எனினும் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கட்டுப்படுத்துவதற்கு நான் பொலிஸாரை அழைக்கவில்லை. மாறாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். அவர்களுடைய சில கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கான அவர்களின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டியது கட்டாயமாகும் என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் அதிகளவில் ஒன்றுகூடும் ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் மறு அறிவித்தல் வரை தடை செய்யப்படுவதாக கடந்த செவ்வாய்கிழமை பொலிஸ் தலைமையகத்தினால் அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கடந்த புதன்கிழமையிலிருந்து பலதரப்பட்ட கோரிக்கைகள் மற்றும் உரிமைகளுக்காகப் போராடுவோரைக் கைது செய்யும் நடவடிக்கைகளைப் பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

குறிப்பாக நேற்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களைப் பொலிஸார் தூக்கிச் சென்று பொலிஸ் வண்டிகளில் ஏற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டன.

அதுமாத்திரமன்றி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுதல் தடை செய்யப்பட்டுள்ளமையானது, பொதுமக்களின் கருத்துச் சுதந்திரத்தையும் அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளை விமர்சிக்கும் சுதந்திரத்தையும் பறிப்பதாக அமையும் என்று குறிப்பிட்டு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினால் நேற்று பாராளுமன்றத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறானதொரு பின்னணியில் ஆர்ப்பாட்டங்கள் தடை செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது, நான் நிதியமைச்சராகப் பதவி வகித்த காலப்பகுதியில் அநேகமாக நாளாந்தம் எனது அமைச்சிற்கு முன்னால் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்படும்.

அவ்வாறான சந்தர்ப்பங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களைக் கலைப்பதற்கு நான் பொலிஸாருக்கு அழைப்பு விடுக்கவில்லை. மாறாக போராட்டம் முடிவிற்கு கொண்டுவரப்படும் வரையில் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம்.

சில சந்தர்ப்பங்களில் அவர்களால் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதவையாகக் கூட இருக்கலாம். ஆனால் கோரிக்கைகளை முன்வைப்பதற்கும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்குமான அவர்களின் உரிமைக்கு நாம் மதிப்பளிக்க வேண்டியது கட்டாயமாகும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுவதற்கு நிர்பந்திக்கப்பட்டிருக்கிறாரகள். கட்டாயத் தனிமைப்படுத்தல் என்பது ஏற்றுக் கொள்ளப்பட முடியாததும் சட்டத்திற்கு முரணனாதுமாகும் என்றும் மங்கள சமரவீர அவரது டுவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டிருப்பதுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலுகட்டாயமாகப் பொலிஸாரால் இழுத்துச் செல்லப்படும் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment