நாம் தொற்றுக்குள்ளாகவில்லை என உறுதிப்படுத்தப்பட்ட பின்னரும் பலவந்தமாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றோம் - ஜோசப் ஸ்டாலின் - News View

About Us

About Us

Breaking

Thursday, July 15, 2021

நாம் தொற்றுக்குள்ளாகவில்லை என உறுதிப்படுத்தப்பட்ட பின்னரும் பலவந்தமாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றோம் - ஜோசப் ஸ்டாலின்

(நா.தனுஜா)

எம்மை சட்டவிரோதமான முறையில் முல்லைத்தீவு விமானப் படைத் தளத்திற்கு அழைத்து வந்து ஒரு வாரம் பூர்த்தியடைந்திருக்கின்றது. எமக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் மூலம் நாம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னரும், நாம் இங்கு பலவந்தமாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றோம் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, தம்மைத் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்து வந்த பஸ் வண்டியில் 12 இற்கும் அதிகமான பொலிஸ் அதிகாரிகள் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ள ஜோசப் ஸ்டாலின், அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதா? அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டார்களா? என்றும் அண்மையில் பசில் ராஜபக்ஷ அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டபோது முன்னெடுக்கப்பட்ட உற்சாகக் கொண்டாட்டங்கள், அமைச்சர் பந்துல குணவர்தன பெருமளாவானோர் புடைசூழ மொனராகலைக்குச் சென்றமை உள்ளிட்ட சம்பவங்களின்போது அவர்களுக்கு எதிராகத் தனிமைப்படுத்தல் சட்டம் ஏன் பிரயோகிக்கப்படவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழக சட்ட மூலத்திற்கு எதிராகக் கடந்த வாரம் பாராளுமன்ற சுற்று வட்டத்திற்கு அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட குழுவினர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டதன் பின்னர், முல்லைத்தீவிலுள்ள விமானப் படைத் தளத்திற்குப் பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள காணொளியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment