உலகம் முழுவதும் கடன் பெற்று நிர்வாகத்தை முன்னெடுக்கலாம் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் : லாப் சமையல் எரிவாயு நிறுவனம் குறித்து எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை - ருவான் விஜயவர்தன - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 28, 2021

உலகம் முழுவதும் கடன் பெற்று நிர்வாகத்தை முன்னெடுக்கலாம் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் : லாப் சமையல் எரிவாயு நிறுவனம் குறித்து எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை - ருவான் விஜயவர்தன

(இராஜதுரை ஹஷான்)

நாடு பொருளாதார மட்டத்தில் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் சிறந்த திட்டம் ஏதும் அரசாங்கத்திடம் கிடையாது. உலகம் முழுவதும் கடன் பெற்று அரச நிர்வாகத்தை முன்னெடுக்கலாம் என்ற நிலைப்பாட்டில் இருந்துகொண்டு அரசாங்கம் செயற்படுகிறது என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார்.

பியகம பகுதியில் உள்ள ஐக்கிய தேசிய கட்சியின் காரியாலயத்தில் கட்சி செயற்பாட்டாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், முறையற்ற வகையில் பெற்றுக் கொள்ளப்படும் அரச முறை கடன்களை இறுதியில் இலங்கையர்களே மீள செலுத்த வேண்டும். இந்த அரசாங்கத்திற்கு எதிராக அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்.

வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில் சமையல் எரிவாயு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளினால் நாட்டு மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

லாப் சமையல் எரிவாயு நிறுவனம் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை இடைநிறுத்தவதாக குறிப்பிட்டுள்ளது. இவ்விடயம் குறித்து அரசாங்கம் இதுவரையில் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.

நாட்டின் சமையல் எரிவாயுவில் 30 சதவீதமான சமையல் எரிவாயுவை லாப் சமையல் எரிவாயு நிறுவனம் விநியோகிக்கிறது. டொலரின் பெறுமதி அதிகரிப்பு, உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்பு ஆகிய காரணிகளினால் தாம் நெருக்கடிகளை எதிர்க் கொண்டுள்ளதாக லாப்கேஸ் நிறுவனத்தினர் அரசாங்கத்திடம் குறிப்பிட்டுள்ளார்கள்.

லாப் கேஸ் நிறுவனத்தை அரசாங்கத்திற்கு சொந்தமான லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு கீழ் கொண்டு வருவதாக அரசாங்கம் குறிப்பிட்ட வாக்குறுதி இதுவரையில் செயற்படுத்தப்படவில்லை எனவும் குற்றம் சுமத்தினார்.

No comments:

Post a Comment