சுகாதார கட்டுப்பாடுகள் உரிமைகளை மீறாதிருப்பது அவசியம் : ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி - News View

About Us

About Us

Breaking

Sunday, July 11, 2021

சுகாதார கட்டுப்பாடுகள் உரிமைகளை மீறாதிருப்பது அவசியம் : ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி

(நா.தனுஜா)

ஒன்று கூடுவதற்கான உரிமை என்பது அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமையையும் உள்ளடக்கியிருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி, கொரோனா வைரஸ் பரவலைக் கருத்திற் கொண்டு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள், உண்மையில் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டுச் செல்லாமலிருப்பது அவசியமாகும் என்றும் வலியுறுத்தியிருக்கின்றார்.

கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்கள் அதிகளவில் ஒன்று கூடும் ஆர்ப்பாட்டங்கள், பொதுக் கூட்டங்கள், பேரணிகள் தடை செய்யப்பட வேண்டும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்திற்கு அமைவாக, மேற்படி செயற்பாடுகள் மறு அறிவித்தல் வரை தடை செய்யப்படுவதாகக் கடந்த செவ்வாய்க்கிழமை பொலிஸ் தலைமையகத்தினால் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த புதன்கிழமையிலிருந்து பலதரப்பட்ட கோரிக்கைகள் மற்றும் உரிமைகளுக்காகப் போராடுவோரைக் கைது செய்யும் நடவடிக்கைகள் பொலிஸாரால் தீவிரப்படுத்தப்பட்டன.

குறிப்பாக ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்ட மூலத்திற்கு எதிராகக் கடந்த வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கை ஆசிரியர் சங்கத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட பலரை பொலிஸார் தூக்கிச் சென்று பொலிஸ் வண்டிகளில் ஏற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டதுடன் இச்சம்பவம் பல்வேறு சர்ச்சைகளையும் தோற்றுவித்திருந்தது.

ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுதல் தடை செய்யப்பட்டுள்ளமையானது, பொதுமக்களின் கருத்துச் சுதந்திரத்தையும் அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளை விமர்சிக்கும் சுதந்திரத்தையும் பறிப்பதாக அமையும் என்று பல்வேறு தரப்பினராலும் கண்டனம் வெளியிடப்பட்டு வந்த நிலையில், இது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஒன்றுகூடுவதற்கான உரிமை என்பது அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமையையும் உள்ளடக்கியதாகும். அது ஏனைய உரிமைகளான கருத்துச் சுதந்திரம் மற்றும் பொது நிர்வாகக் கொள்கைகளின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கான சுதந்திரம் ஆகியவற்றை உரியவற்றுக்கு பிரயோகிப்பதற்கு உதவுகின்றது என்று ஹனா சிங்கர் அவரது டுவிட்டர் பதிவில் சுட்டிக் காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment