கோபா அமெரிக்க இறுதிப் போட்டியில் ஆர்ஜென்டீனா 1-0 என்ற கோல் கணக்கில் பிரேசிலை வீழ்த்தி 28 ஆண்டுகளில் தேசிய அணியின் முதல் பெரிய பட்டத்தைப் பெற்றது.
ரியோ டி ஜெனிரோவில் உள்ள மரகானா மைதானத்தில் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை நடந்த இறுதிப் போட்டியில் தொடக்கம் முதலே பிரேசில் ஆக்ரோஷம் காட்டி வந்தது.
எனினும் வெற்றி கோல் போட்டியின் 22 ஆவது நிமிடத்தில் 33 வயதான ஏஞ்சல் டி மரியாவினால் ஆர்ஜென்டீன அணிக்காக பெற்றுக் கொடுக்கப்பட்டது.
முதல் பாதி ஆட்டத்தில் மேற்கொண்டு கோல் விழாததால் ஆர்ஜென்டீனா 1-0 என முன்னிலை வகித்தது.
2 ஆவது பாதி ஆட்டத்தில் பிரேசில் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பிரேசில் நட்சத்திர ஆட்டக்காரர் நெய்மர் முதல் கோலுக்கு கடுமையாக முயற்சித்தார்.
எனினும், ஆர்ஜென்டீனா சிறப்பான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது. இறுதியில் கூடுதலாக 4 நிமிடங்கள் வழங்கப்பட்டன. பிரேசில் அணியால் கூடுதல் நேரத்திலும் கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்ய முடியவில்லை.
இதன்மூலம், ஆர்ஜென்டீனா 1-0 என்ற கோல் கணக்கில் வென்று சாம்பியன் ஆனது.
ஆர்ஜென்டீனா வெற்றிகொள்ளும் 15 ஆவது கோபா அமெரிக்கா கிண்ணம் இது என்பதுடன், 34 வயதான லியோனல் மெஸ்ஸியின் முதல் பெரிய சர்வதேச பட்டத்துக்கான காத்திருப்பும் நிறைவுக்கு வந்துள்ளது.
No comments:
Post a Comment