(எம்.எப்.எம்.பஸீர்)
பிரதிவாதி தரப்புக்கு சாதகமாக வழக்குத் தீர்ப்பொன்றினை கொடுப்பதற்காக பெண் ஒருவரிடமிருந்து 3 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக பெற்ற ஹோமாகம முன்னாள் மாவட்ட நீதிபதி சுனில் விக்ரம அபேசிங்கவின் பிணை கோரிய மீளாய்வு மனுவை மேன் முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது.
மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான மேனகா விஜேசுந்தர மற்றும் நீல் இத்தவல ஆகிய நீதிபதிகள் நேற்று இவ்வாறு குறித்த மனுவை நிராகரித்து தீர்ப்பளித்தனர்.
ஹோமாகம முன்னாள் மாவட்ட நீதிபதி சுனில் விக்ரம அபேசிங்க மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தரான பொலிஸ் கான்ஸ்டபிள் மஹிந்த கித்சிரி ஆகியோருக்கு 16 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து கடந்த 2020 பெப்ரவரி 20 ஆம் திகதி தீர்ப்பளிக்கப்ப்ட்டது. கொழும்பு மேல் நீதிமன்றின் நீதிபதி ஆதித்த பட்டபெத்தி இந்த தீர்ப்பை வழங்கினார்.
இவ்விரு குற்றவாளிகளும் நீதித்துறைக்கும் பொலிஸ் துறைக்கும் பாரிய இழுக்கு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய நீதிபதி, அதனால் அவ்விருவருக்கும் இலகு தண்டனை ஒன்றினை வழங்க முடியாது என கூறியதுடன், 16 வருட கடூழிய சிறைத் தண்டனைக்கு மேலதிகமாக குற்றவாளிகள் இருவரும் தலா 20 ஆயிரம் ரூபா அபராதம் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
அதனைவிட, குற்றவாளிகள் இருவரும் இலஞ்சமாக பெற்ற 3 இலட்சம் ரூபா பணத்தை, குற்றவாளிகள் இருவரிடமிருந்தும் தனித்தனியாக அறவிட வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, அதனை அவர்கள் செலுத்தாவிடின் மேலும் 6 வருடங்கள் கடூழிய சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும் எனவும் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில் மேன் முறையீட்டு நீதிமன்றில் பிணைக் கோரி முன்னாள் மாவட்ட நீதிபதி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனு நேற்று பரிசீலிக்கப்பட்ட போது, குற்றவாளியான முன்னாள் நீதிபதியின் வயது, கொவிட்-19 நிலைமையை கருத்தில் கொண்டு பிணை அளிக்குமாறு கோரப்பட்டது.
எனினும் அவை பிணை அளிக்க ஏதுவான காரணி அல்ல எனக் கூறி மேன் முறையீட்டு நீதிமன்றம் குறித்த மீளாய்வு மனுவை நிராகரித்தது.
No comments:
Post a Comment