வவுனியாவில் கற்குவாரியை நிறுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டம் : பொலிஸ் அதிகாரியின் கோரிக்கையையடுத்து கைவிடப்பட்டது - News View

About Us

About Us

Breaking

Saturday, July 3, 2021

வவுனியாவில் கற்குவாரியை நிறுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டம் : பொலிஸ் அதிகாரியின் கோரிக்கையையடுத்து கைவிடப்பட்டது

வவுனியா புதிய சின்னக்குள மக்கள் நேற்று (03.07.2021) கற்குவாரிக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர். தமது பிரதேசத்தில் குடிமனைகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள கற்குவாரியை அகற்றுமாறு கோரியே இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா அக்போபர கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட புதிய சின்னக்குள பகுதியில் உள்ள சிறிய மலைக்குன்றில் கல்லுடைப்பதால் பல்வேறு அசௌகரியங்கள் ஏற்படுவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த கிராம மக்கள், குறித்த கற்குவாரியில் கல்லுடைப்பதால் பொதுமக்களின் வீடுகளில் வெடிப்புக்கள் ஏற்படுவதுடன் எந்தவித அறிவித்தலும் இன்றி வெடி வைத்து கற்களை உடைக்கும் போது அங்கிருந்து சிதறி வரும் கருங்கல் துண்டுகள் அருகில் உள்ள தமது வீடுகளின் கூரையில் விழுவதுடன் தோட்ட காணிகளுக்கும் விழுகின்றது.

அத்தோடு கற்களினை உடைக்க பயன்படும் வெடி மருந்து காரணமாக சுவாச பிரச்சினை ஏற்படுவதோடு குழந்தைகள் மயக்கமடையும் நிலையும் ஏற்படுவதாகவும், மேய்ச்சலுக்கு சென்ற கால்நடைகளும் இறந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

சுற்றுவட்டத்தில் இருக்கும் அனைத்து கிராமங்களிற்கும் குறித்த கற்குவாரியால் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே குறித்த கல்குவாரியில் கல் உடைக்கும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கற்குவாரியை நிறுத்து, வெடி பொருட்கள் பயன்படுத்தி கல் உடைப்பதை நிறுத்துங்கள், கற்குவாரியால் வீடுகள் சேதம், இயற்கை வளம் அழிக்கப்படுகிறது போன்ற பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த இடத்திற்கு வருகை தந்த வவுனியா - மாமடு பொலிஸ் அதிகாரி வெடி பொருட்கள் பயன்படுத்தி கல் உடைப்பதை தற்காலிகமாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் கூறி ஆர்ப்பாட்டத்தை கைவிடுமாறு விடுத்த கோரிக்கைக்கு அமைவாக ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

No comments:

Post a Comment