தனிமைப்படுத்தும் அதிகாரம் செயலணிக்குழுவுக்கு மாத்திரமே உள்ளது : பொதுமக்கள் தங்களது பகுதியை காப்பாற்றும் நோக்கில் செயற்பட வேண்டும் - ஓட்டமாவடி பிரதேச செயலாளர் - News View

About Us

About Us

Breaking

Monday, July 5, 2021

தனிமைப்படுத்தும் அதிகாரம் செயலணிக்குழுவுக்கு மாத்திரமே உள்ளது : பொதுமக்கள் தங்களது பகுதியை காப்பாற்றும் நோக்கில் செயற்பட வேண்டும் - ஓட்டமாவடி பிரதேச செயலாளர்

எஸ்.எம்.எம்.முர்ஷித்

ஒரு பகுதியில் கொரோனா தாக்கம் அதிகரிக்கும் பட்சத்தில் குறித்த பகுதியை தனிமைப்படுத்தும் அதிகாரம் கொரோனா உயர்மட்ட செயலணிக்குழுவுக்கு மாத்திரமே உள்ளது என ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வீ.தவராஜா தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் கொரோனா வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்துவது தொடர்பிலான விசேட கூட்டம் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து காணப்படும் நிலையில் பொதுமக்கள் தங்களது பகுதியை காப்பாற்றும் நோக்கில் செயற்பட வேண்டும். பெரும்பாலானவர்கள் அரச அதிகாரிகளை குறை கூறுவதில் கவனம் செலுத்துவதில் மாத்திரம் உள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரதேசம் தனிமைப்படுத்தும் நிலையை ஏற்படுத்தும் வகையில் நாம் செயற்படுவதன் காரணமாகவே பிரதேசம் முடக்கப்படுகின்றது. ஒவ்வொருவரும் சிந்தித்து செயற்பட்டால் எமது பிரதேசம் முடக்கமோ கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிக்கவோ இடமளிக்காமல் இருக்க முடியும்.
எனவே நாம் அனைவரும் எமது பிரதேசத்தினையும், எமது உறவுகளையும் காப்பாற்றும் நோக்கில் சுகாதார விதிமுறைகளை கடைபிடித்து நடந்து கொள்ள வேண்டும். அனாவசியாக வெளியில் நடமாடாமலும், வியாபார நிலையங்களில் கூடி நிற்காமல் சுகாதார ஒழுங்குகளை கடைப்பிடிக்க வேண்டும். நாம் அனைவரும் சுகாதார விதிமுறைகளை கடைபிடித்துக் கொண்டால் நாம் அனைவரும் கொரோனா வைரஸில் இருந்து காப்பாற்றிக் கொள்ள முடியும்.

அதனை விடுத்து முகநூல் வாயிலான போலியான வார்த்தைகள் மற்றும் அரச அதிகாரிகளை விமர்ச்சிப்பதை விடுத்து உண்மைத் தன்மையை புரிந்து கொண்டு அனைவரும் செயற்பட வேண்டும். அத்துடன் பத்திரிகையாளர்கள் மக்களுக்கான விழிப்புணர்வை தமது ஊடகத்தினுடாக வழங்க வேண்டும் என்றார்.

இந்நிகழ்வில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி எச்.எம்.எம்.தாரிக், ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர், செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரிகள், கிராம சேவை அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் கொரோனா வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துமாறும், மக்களை சுகாதார விதிமுறைகளை பேணும் வகையில் செயற்படுமாறும் கிராம அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment