தற்போதைய அரசாங்கத்தினால் நிதியமைச்சின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டுள்ள செலெந்திவா நிறுவனம் மூலம் கொழும்பிலுள்ள பெறுமதி வாய்ந்த காணிகளை வெளிநாடுகளுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது, இந்த செலெந்திவா நிறுவனம் யாரால் ஸ்தாபிக்கப்பட்டது? அதற்குரிய அதிகாரங்கள் யாரால் வழங்கப்பட்டுள்ளன? என்ற கேள்விகளுக்குரிய பதிலை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும்.
நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் வெளிநாடுகளுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் விற்கப்பட்ட தேசிய வளங்களையும் சொத்துக்களையும் மீளப் பெறுவதாக வாக்குறுதியளித்தே தற்போதைய அரசாங்கம் ஆட்சிபீடமேறியது.
அதன்படி எமது அரசாங்கத்தினால் நாட்டின் தேசிய சொத்துக்கள் வெளிநாடுகளுக்கு வழங்கப்பட்டதைப் போன்றதொரு மாயையையும் அவர்கள் பொதுமக்கள் மத்தியில் உருவாக்கினர்.
குறிப்பாக 'வியத்மக' என்ற அமைப்பும் நாடு முழுவதும் சென்று, இல்லாதவொன்றை இருப்பது போன்று காண்பிப்பதற்கு அவசியமான பிரசாரங்களை மேற்கொண்டார்கள் என்றார்.
No comments:
Post a Comment