புத்தசாசன அமைச்சுப் பதவியை ஜனாதிபதி வகிக்க வேண்டும் : மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம் - News View

About Us

About Us

Breaking

Saturday, July 10, 2021

புத்தசாசன அமைச்சுப் பதவியை ஜனாதிபதி வகிக்க வேண்டும் : மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்

(எம்.எப்.எம்.பஸீர்)

புத்தசாசன அமைச்சுப் பதவியை ஜனாதிபதி வகிக்க வேண்டும் என அறிவித்து உத்தரவிடுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

சட்டத்தரணி அருண லக்சிறி உனவட்டுன தாக்கல் செய்த இந்த மனுவில் எந்த சட்ட அடிப்படையும் இல்லை என தெரிவித்து விசாரணைக்கு ஏற்காது உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்வதாக அறிவித்தது.

உயர் நீதிமன்ற நீதியர்சர்களான எல்.ரி.பி. தெஹிதெனிய, ஏ.எச்.எம்.டி. நவாஸ் மற்றும் ஷிரான் குணரத்ன அகையோர் அடங்கிய நீதியர்சர்கள் குழாம் இதனை அறிவித்தது.

இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவில் பிரதிவாதியாக ஜனாதிபதிக்கு பதிலாக சட்டமா அதிபர் பெயரிடப்பட்டிருந்தார்.

தற்போது ஜனாதிபதியிடம் காணப்படும் பாதுகாப்பு அமைச்சுப் பதவியை வேறொரு பாராளுமன்ற உறுப்பினரிடம் கையளிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அறிய முடிவதாகவும், அவ்வாறு அவ்வமைச்சு கையளிக்கபப்டுமானால் அந்த செயற்பாடும் புத்தசாசன அமைச்சு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் கையளிக்கப்பட்டிருப்பதும் அரசியல் அமைப்பை மீறும் செயல் என அறிவித்து உத்தரவிடுமாறு மனுதாரர் குறித்த அடிப்படை உரிமை மீறல் மனுவில் கோரியிருந்தார்.

குறித்த மனுவில் மனுதாரர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 'ஏதேனும் ஒரு மாவட்டத்தின் வாக்காளர்களால் அல்லது தேசியப்பட்டியலூடாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படும் நபராக அன்றி முழு நாட்டு மக்களின் நேரடி வாக்குகளால் ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவதால், பாதுகாப்பு மற்றும் புத்தசாசன அமைச்சுப் பதவிகளை ஜனாதிபதி வகிப்பது அரசியல் அமைப்பின் பிரகாரம் ஏற்புடையது.

அவ்வாறு செய்யத் தவறினால், அரசியல் அமைப்பின் 09, 10 மற்றும் 12 ஆம் சரத்தின் முதலாம் பிரிவு ஆகியவற்றில் பாதுகாக்கப்படும் உரிமைகள் மீறப்படும். அல்லது அவற்றை மீற முயற்சிக்கப்படுவதாக கருதப்பட வேண்டும்.

அரசியலமைப்பின் 30 ஆவது சரத்திற்கு அமைய ஜனாதிபதி, அரசாங்கத்தின் தலைவராகவும் நிறைவேற்றதிகாரத்தின் தலைமையை வகிப்பதாலும் அரசியலமைப்பின் 09 ஆவது சரத்திற்கு அமைய, புத்த மதத்திற்கான முன்னுரிமையை பேணுதல் என்ற விடயத்தில் அந்த விவகார அமைச்சினை பிரிதொரு நபரிடம் கையளிப்பதன் ஊடாக ஜனாதிபதி அடிப்படை உரிமைகளை மீறுவதாக கருதப்பட வேண்டும். ' என மனுதாரர் சுட்டிக்கடடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment