கடும் காற்றினால் மரங்கள் முறிவு : நான்கரை இலட்சம் பேருக்கு மின்சாரம் இல்லை - மண்சரிவு, வெள்ளப் பெருக்கு குறித்து எச்சரிக்கை..! - News View

About Us

About Us

Breaking

Saturday, July 10, 2021

கடும் காற்றினால் மரங்கள் முறிவு : நான்கரை இலட்சம் பேருக்கு மின்சாரம் இல்லை - மண்சரிவு, வெள்ளப் பெருக்கு குறித்து எச்சரிக்கை..!

நாடெங்கிலும், திடீரென கடுமையான காற்று வீசியதுடன் மழையும் பெய்ததால் தலைநகர் கொழும்பில் நேற்றிரவு (09.07.2021) மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன.

பல பகுதிகளில் பாரிய மரங்கள் முறிந்து வீழ்ந்ததுடன், வர்த்தக நிலையங்களில் பொருத்தப்பட்டிருந்த பதாதைகளும் பெயர்ப்பலகைகளும் உடைந்து வீழ்ந்து சேதமடைந்துள்ளன.

அத்துடன் பலத்த காற்றுக் காரணமாக சில வீடுகளில் கூரைகளிலும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. சீரற்றகால நிலை காரணமாக நாடளாவிய ரீதியில் 475,000 பேர் மின்சார செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக எதிர்வரும் நாட்களில் கடும் காற்றுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டளவியல் தினைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய மாகாணத்தில் மணிக்கு 80 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசுவதுடன் வடக்கு , வட மத்திய, மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் கடும் காற்றுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும்.

அதேபோன்று, சீரற்ற கால நிலையினால் காலி, களுத்துறை, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினப்புரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் குறித்த மாவட்டங்களில் 10 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் களனி கங்கை, களு கங்கை, கிங் கங்கை மற்றும் நில்வலா கங்கை ஆகியவற்றின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதால், வெள்ள பெருக்கு குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் அடுத்து வரும் 24 மணித்தியாலயத்தில் களனி கங்கையின் நீர் மட்டம் மேலும் அதிகரித்து தெஹியோவிட, ருவன்வெல்ல, சீதாவக, தொம்பே, கடுவெல, கொலன்னாவ, மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளின் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு கடும்மழை வீழ்ச்சி பதிவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment