ஆக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போபத்தலாவை காட்டுப்பகுதியில் விலங்குகளை வேட்டையாடி இறைச்சி விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பம் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்டவரிடமிருந்து சுமார் 08 கிலோ கிராம் இறைச்சி மற்றும் துப்பாக்கி மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அக்கரபத்தனை போபத்தலா மெனிக்பாம் கால் நடை தேசிய பண்ணையிலிருந்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் கால்நடை பண்ணையின் காவலாளியாக பணிபுரிபவர். எனவே அந்த சீருடையையும் அவருக்கு பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கியையும் பயன்படுத்தி வனப் பகுதியில் மான், மறை, பன்றி உள்ளிட்ட விலங்குகளை வேட்டையாடி வந்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
நீண்ட காலமாக இந்த சட்டவிரோத நடவடிக்கை இடம்பெற்று வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலினையடுத்தே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை மீட்கப்பட்ட இறைச்சி, துப்பாக்கி உள்ளிட்ட பொருட்களுடன் நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
ஹற்றன் விசேட நிருபர்
No comments:
Post a Comment