டி.ஏ. ராஜபக்ஷ ஞாபகார்த்த அருங்காட்சியகத்தை நிர்மாணத்தின் போது, இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபத்திற்குச் சொந்தமான சுமார் 34 மில்லியன் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட, குறித்த கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பிரசாத் ஹர்ஷான் டி சில்வா உள்ளிட்ட 6 சந்தேகநபர்களையும் விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று (02) சம்பா ஜானகி ராஜரத்ன, தமித் தொட்டவத்த, நாமல் பலன்னே ஆகிய மூன்று நீதிபதிகள் குழுவினால் குறித்த உத்தரவு வழங்கப்பட்டது.
இந்த திட்டத்திற்கு செலவிடப்பட்ட ரூ. 33,944,741.60 தொகை டி.ஏ. ராஜபக்ஷ ஞாபகார்த்த அறக்கட்டளையினால் கடந்த 2017 ஜூலை 13ஆம் திகதி செலுத்தப்பட்டுள்ளதாக, கூட்டுத்தாபனத்தினால் மேற்கொண்ட உள்ளக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக, கூட்டுத்தாபனம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கபில லியனகம இதன்போது மன்றிற்கு அறிவித்தார்.
குறித்த நிதி இவ்வாறு செலுத்தப்பட்டுள்ளதால், இந்த வழக்கில் பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 194 (1) இன் கீழ் வழக்கைத் தொடர விரும்பவில்லையென, சட்ட மாஅதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அதற்கமைய, பிரதிவாதிகளை விடுவிக்குமாறு, அவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி அனில் சில்வா நீதிமன்றத்தை கோரினார்.
அதன்படி, மூன்று நீதிபதிகள் கொண்ட மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம், குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்க உத்தரவிட்டதுடன், அவர்களின் பயணத் தடையை நீக்கவும், அவர்களது கடவுச்சீட்டுகளை மீள ஒப்படைக்கவும், குடிவரவு மற்றும் குடிவரவு கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவிட்டது.
குறித்த வழக்கின் பிரதிவாதிகளில் ஒருவராக கோட்டாபய ராஜபக்ஷவும் பெயரிடப்பட்டிருந்த நிலையில், அவர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜனாதிபதிக்குள்ள சலுகையின் அடிப்படையில், 2019 ஆம் ஆண்டில் அவர் மீதான வழக்கை நிறைவு செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment