(நா.தனுஜா)
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்குப் பங்களிப்புச் செய்யக் கூடிய வகையில் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வழங்கப்படும் 2 இலட்சம் அமெரிக்க டொலர் நிதியுதவி மற்றும் 2 இலட்சம் அன்டிஜன் பரிசோதனை உபகரணங்களைப் பெறுவதற்குத் தகுதி பெற்றிருக்கும் 5 நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது.
இது குறித்து ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூற்று மருத்துப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சந்திம ஜீவந்தர தெளிவுபடுத்தியுள்ளார்.
இது பற்றி அவர் மேலும் கூறியிருப்பதாவது, உலக சுகாதார ஸ்தாபனத்தினால் கடந்த வருடம் டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் தொற்றை இனங்காண்பதற்கான அன்டிஜன் பரிசோதனையை முன்னெடுப்பதற்கு அவசியமான உபகரணங்களைப் பெற்றுக் கொள்வதற்கான நிதியுதவியொன்றை வழங்குவது குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தததுடன் அதற்கான கோரிக்கைகைள் முன்வைக்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூற்று மருத்துவப் பிரிவின் ஊடாக நானும் பேராசிரியர் நீலிகா மலவிகேவும் மேற்படி நிதியுதவியைப் பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பப்படிவத்தை சமர்ப்பித்திருந்தோம்.
பல்வேறு நாடுகளாலும் முன்வைக்கப்படும் கோரிக்கைகளில் போட்டித் தன்மையின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட ஐந்து நாடுகளுக்கு மாத்திரமே உலக சுகாதார ஸ்தாபனத்தினால் மேற்படி நிதியுதவி வழங்கப்படும்.
இந்நிலையில் குறித்த விண்ணப்பத்துடன் நாம் முன்வைத்திருந்த மாதிரி செயற்திட்டமானது அங்கீகரிக்கப்பட்டு, நிதியுதவியைப் பெறுவதற்குத் தகுதி பெறும் 5 நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது.
ஸ்ரீ ஜயவர்னபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூற்று மருத்துவப் பிரிவின் இச்செயற்திட்டத்தின் பங்காளிகளாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தனவையும் கொழும்பு மாநகர சபையையும் குறிப்பிட முடியும்.
இந்நிலையில் ஆய்வுகூடப் பரிசோதனை நடவடிக்கைகளுக்காக 2 இலட்சம் அமெரிக்க டொலர் நிதியுதவியும் 2 இலட்சம் அன்டிஜன் பரிசோதனை உபகரணங்களும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஊடாக எமது நாட்டிற்குக் கிடைக்கப் பெறும்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு பாரியதொரு நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், கொவிட்-19 தொற்றாளர்களை விரைவாக இனங்காண்பதற்கும் பி.சி.ஆர் பரிசோதனை உபகரணங்களின் மட்டுப்பாட்டை ஈடு செய்வதற்கும் இதனைப் பயன்படுத்த முடியும்.
அதேபோன்று தற்போது வழங்கப்பட்டுள்ள நிதியுதவியில் ஆய்வு கூட நடவடிக்கைகளுக்கான எமது சொற்பளவான நிதியே தேவைப்படும். எஞ்சுகின்ற நிதியை மருத்துவ உபகரணங்களை விநியோகிக்கும் கட்டமைப்பிற்கு வழங்குவதற்கு எதிர்பார்த்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment