மாயமான ரஷிய விமானம் கடலில் விழுந்தது - 28 பேரும் நீரில் மூழ்கி பலி - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 7, 2021

மாயமான ரஷிய விமானம் கடலில் விழுந்தது - 28 பேரும் நீரில் மூழ்கி பலி

மாயமான ரஷிய விமானம் கடலில் விழுந்ததில் 28 பேரும் நீரில் மூழ்கி பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷியா கிழக்கு பகுதியில் கம்சாட்கா தீபகற்பம் அமைந்துள்ளது. இங்கிருந்து நேற்று காலையில் ‘அன்டோனாவ் ஆன்-26 ’ ரக பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது. இதில் 22 பயணிகளும், 6 விமான சிப்பந்திகளும் இருந்தனர்.

இந்த விமானம், பலானா நகரில் உள்ள விமான நிலையத்தில் தரை இறங்க தயாரானது. அப்போது திடீர் என்று கட்டுப்பாட்டு அறையுடன் இருந்த தொடர்பு துண்டிக்கப்பட்டது. அந்த விமானம் தரை இறங்கவில்லை. அதன் நிலை என்னவென்று தெரியாமல் மாயமானது.

அந்த விமானத்தை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. ரஷிய விமான படைக்கு சொந்தமான ஹெலிகொப்டர்கள் தேடுதல் வேட்டையில் இறங்கின.

பல மணி நேர தேடுதலுக்கு பிறகு மாயமான விமானத்தின் சில சிதைவுகள் விமான நிலையத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் கண்டு பிடிக்கப்பட்டது. ஒரு சில பாகங்கள் தரையிலும், சில பாகங்களின் சிதைவுகள் கடலிலும் கண்டுபிடிக்கப்பட்டன.

விமானத்தின் நிலை என்ன? அதில் பயணம் செய்த 28 பேரின் கதி என்ன? என்பது தெரியாமல் இருந்து வந்தது. விமான நிலையத்தை சுற்றியுள்ள 25 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஓ கோட்ஸ் கடலை மையமாக கொண்டு தேடும் பணி நடந்தது.

தற்போது இந்த விமானம் கடலில் விழுந்ததாக தெரிய வந்துள்ளது. இதில் பயணம் செய்த 28 பேரும் நீரில் மூழ்கி இறந்து இருக்கலாம். யாரும் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷியாவில் 1969 முதல் 1986 வரை தயாரிக்கப்பட்ட ‘ஆன்-26 ’ வகை விமானங்கள் சமீப காலமாக பல விபத்துகளில் சிக்கி உள்ளன. சமீப காலத்தில் இந்த ரக விமானங்களால் நடந்த 2 விபத்துகளில் பல பேர் உயிர் இழந்துள்ளனர்.

ரஷியாவில் 2019 மே மாதம் நடந்த ‘ கோய் சூப்பர் ’ விமான விபத்தில் 41 பேர் உயிரிழந்தனர். இப்போது மீண்டும் இந்த விமான விபத்து ஏற்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment