சுற்றுலா இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது ரி20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியுள்ளது.
இலங்கை அணிக்காக இறுதி வரை களத்தில் நின்று ஆட்டமிழக்காது 40 ஓட்டங்களை பெற்ற தனஞ்சய டி சில்வா போட்டியின் நாயகனாக தெரிவானார்.
நேற்று (28) இரவு கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத் தடுப்பை தெரிவு செய்தது.
அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 132 ஓட்டங்களை பெற்றது.
இந்திய அணி சார்பில் ஷிகர் தவான் 40, தேவ்தத் படிக்கல் 29, ருதுராஜ் கெய்க்வத் 21 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தனர்.
இலங்கை அணி சார்பில் அகில தனஞ்சய தவான், சஞ்சு சம்சன் ஆகியோரை போல்ட் முறையில் நேரடியாக பந்தை விக்கெட்டுக்கு செலுத்தி ஆட்டமிழக்கச் செய்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். தசுன் ஷானக, துஷ்மந்த சமீர, வணிந்து ஹசரங்க ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 2 பந்துகள் மீதமிருக்கு 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 133 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கை அடைந்தது.
இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மினோத் பானுக 36 ஓட்டங்களை பெற்று சிறந்த ஆரம்பத்தை வழங்கியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து நடு வரிசையில் 4 ஆவது விக்கெட்டுக்காக கைகொடுத்த தனஞ்சய டி சில்வா போட்டியின் இறுதி வரை களத்தில் நின்று 40 ஓட்டங்களை பெற்று இலங்கை அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றார்.
இந்திய அணி சார்பில், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், வருண் சக்ரவர்த்தி, புவனேஷ்வர் குமார், ராஹுல் சாஹர், சேத்தன் சகர்யா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை கைப்பற்றினர்.
அந்த வகையில் 3 போட்டிகளைக் கொண்ட தொடர் 1-1 என சமநிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
தொடரின் தீர்க்கமான 3ஆவது போட்டி இன்று இரவு 8.00 மணிக்கு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
No comments:
Post a Comment