(நா.தனுஜா)
தனது அதிகாரத்தின் கீழுள்ள அனைத்தையும் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட முயற்சிக்கான சிறந்த பதிலாக விவசாய அமைச்சின் நிரந்தர செயலாளர் ஒருவரின் பதவி விலகலைக் குறிப்பிட முடியும். தற்போதைய அரசாங்கத்தின் விவசாய அமைச்சின் செயலாளர் பதவி விலகியுள்ளமை மூன்று மாதங்களில் இது இரண்டாவது முறையாகும். இந்த இராஜினமாக்களுக்கு முக்கிய காரணம், அரசாங்கத்தினால் தன்னிச்சையாக மேற்கொள்ளப்படும் அறிபூர்வமற்ற தீர்மானங்களேயாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தி கடுமையாகச் சாடியுள்ளது.
இது குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, அரசாங்கத்தின் பகுத்தறிவற்றதும் நடைமுறைக்குப் பொருத்தமற்றதுமான தீர்மானங்களின் விளைவாக தற்போது நாடு படிப்படியாக படுகுழியில் தள்ளப்பட்டு வருகின்றது. நாட்டைப் புலமைத்துவப் பாதையில் அழைத்துச் செல்வதாகக்கூறி ஆட்சிபீடமேறிய அரசாங்கம், தற்போது அதற்கு மாறாகவே செயற்பட்டு வருகின்றது.
தற்போது அரசாங்கம் இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்குத் தடை விதித்துள்ள நிலையில், இதன் விளைவாகப் பொருளாதாரம் பாரிய நெருக்கடியை எதிர்கொண்டிருப்பதுடன் மக்கள் அவர்களது ஜீவனோபாயத் தொழிலை முன்னெடுப்பதிலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
உலகின் எந்தவொரு நாடும் காபனேற்றம் செய்யப்பட்ட உரங்களை மாத்திரம் பயன்படுத்தி விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. அத்தகைய நாடுகள் இருப்பின், அவற்றை வெளியிடுமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுகின்றோம். சில நாடுகள் குறிப்பிட்ட சந்தையின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகவே காபனேற்றம் செய்யப்பட்ட உரங்களைப் பயன்படுத்துகின்றன.
இலங்கையில் நெற் பயிர்ச் செய்கை, தேயிலை, உருளைக் கிழங்கு மற்றும் காய்கறி செய்கை என்பன ஏற்கனவே நெருக்கடியில் உள்ளன. சரியான திட்டமிடலுக்குப் பின்னரே காபனேற்றம் செய்யப்பட்ட காபனிக் உரங்களைப் பயன்படுத்த ஆரம்பிக்க வேண்டும். காபனேற்றம் செய்யப்பட்ட உரங்கள் என்ற போர்வையில் சீனநகரக் கழிவுகளை இறக்குமதி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றனவா? என்ற சந்தேகமும் எழுகின்றது.
விஞ்ஞான ரீதியாக நோக்குகையில் நுண்ணுயிரிகளின் செயற்பாட்டைப் பொறுத்ததாகவே காபனேற்றம் செய்யப்பட்ட உரங்களின் செயற்திறன் காணப்படும். தனது அதிகாரத்தில் உள்ள அனைத்தையும் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட முயற்சிக்கான சிறந்த பதிலாக விவசாய அமைச்சின் நிரந்தர செயலாளர் ஒருவரின் பதவி விலகலைக் குறிப்பிட முடியும்.
தற்போதைய அரசாங்கத்தின் விவசாய அமைச்சின் செயலாளர் பதவி விலகியுள்ளமை மூன்று மாதங்களில் இது இரண்டாவது முறையாகும். இந்த இராஜினமாக்களுக்கு முக்கிய காரணம், அரசாங்கத்தினால் தன்னிச்சையாக மேற்கொள்ளப்படும் அறிபூர்வமற்ற தீர்மானங்களேயாகும்.
தற்போதைய அரசாங்கம் புத்திஜீவிகளின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு செயற்படவில்லை என்பதும் தீர்மான்ங்களை மேற்கொள்ளும்போது அவர்களின் ஆலோசனைகள் புறக்கணிக்கப்படுகின்றன என்பதும் தெளிவாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடியின் போதும் சுகாதாரத்துறை அதிகாரிகளைப் புறந்தள்ளி, அரசாங்கம் வெறுமனே அரசியல் ரீதியில் தீர்மானங்களை மேற்கொண்டது என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment