(செ.தேன்மொழி)
பேர்ள் கப்பல் தீப்பரவலையடுத்து அதற்கான நஷ்ட ஈட்டை பெற்றுக் கொள்வதிலேயே அரசாங்கம் ஆர்வமாகவுள்ளது. மாறாக இதனால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து அவர்களுக்கான நிவாரணத்தை வழங்குவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.
பேர்ள் கப்பல் தீவிபத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நேற்று செவ்வாய்கிழமை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், நஷ்ட ஈட்டைப் பெற்றுக் கொள்வதில் ஆர்வம் செலுத்தும் அரசாங்கம், பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களை சந்தித்து, அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கு எவ்வித முயற்சிகளும் செய்யவில்லை.
இதேவேளை, தீக்கிரையான கப்பலில் கொண்டு வரப்பட்ட பொருட்கள் தொடர்பில் இதுவரையிலும் எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை. நட்ட ஈட்டை பெற்றுக் கொள்வதிலேயே அரசாங்கம் மும்முரமாக செயற்பட்டு வருகிறது.
அண்மையில் இதேபோன்று இலங்கை கடற்பரப்பில் தீ விபத்திற்குள்ளான நியூ டயமன் கப்பலுக்காக பல மில்லியன் டொலர்களை அரசாங்கம் நட்டயீடாக பெற்றுக் கொண்டது. எனினும் அந்த பணம் எதற்காக பயன்படுத்தப்பட்டது என்பது அறிவிக்கப்படவில்லை. தற்போது பேர்ள் கப்பலுக்கு கிடைக்கப் பெறும் நட்டயீட்டுக்கு என்ன நடக்கும் என்பதையும் எம்மால் கூற முடியாது என்றார்.
No comments:
Post a Comment