கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்காக நாளை (07) முதல் புதிய ஸ்டிக்கர்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள காலம் முழுவதும் இந்த ஸ்டிக்கர் செல்லுபடியாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்காக ஒருநாளுக்கு மாத்திரம் செல்லுபடியாகும் ஸ்டிக்கர் நடைமுறை தற்போது அமுலிலுள்ள நிலையில், நாளை முதல் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இதன் பிரகாரம் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் வாகனங்களின் தகவல்கள் ஒரு பகுதியில் மாத்திரம் பதிவு செய்யப்படவுள்ளன.
இதனை தொடர்ந்து பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படும் வரை, இந்த ஸ்டிக்கர்களுடன் வாகனங்கள் பயணிக்க முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோருக்கு ஏற்படும் தாமதம் மற்றும் அசௌகரியங்களை குறைக்கும் நோக்கில் இந்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிய ஸ்டிக்கர்களை ஒட்டும் நடைமுறை நாளை காலை முதல் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், இதனால் நாளை காலை வாகன நெரிசல் ஏற்படக்கூடும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறினார்.
இந்த ஸ்டிக்கர் நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் உள்ள காலப் பகுதியில் செல்லுபடியாகும். இவ்வாறான ஸ்டிக்கர்களை தனிநபர்கள் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
No comments:
Post a Comment