ஒட்சிசன் தேவைப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை நான்கரை மடங்கினால் அதிகரிப்பு : மக்களின் ஒத்துழைப்பு கிடைத்தால் மாத்திரமே தற்போதைய நெருக்கடியை கட்டுப்படுத்த முடியும் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 8, 2021

ஒட்சிசன் தேவைப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை நான்கரை மடங்கினால் அதிகரிப்பு : மக்களின் ஒத்துழைப்பு கிடைத்தால் மாத்திரமே தற்போதைய நெருக்கடியை கட்டுப்படுத்த முடியும் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

(நா.தனுஜா)

கொரோனா வைரஸ் தொற்றாளர்களில் ஒட்சிசன் தேவைப்படுவோர் மற்றும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் ஒட்சிசன் தேவைப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை நான்கரை மடங்கினால் அதிகரித்துள்ளது. இந்நிலை தொடருமானால், எதிர்வரும் காலங்களில் இடம்பெறக்கூடிய மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கக்கூடும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்தியகுழு ஊடகக்குழு உறுப்பினரான வைத்தியநிபுணர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துவெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதனால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையும் அசாதாரணமான வகையில் அதிகரித்து வருகின்றன.

தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடளாவிய ரீதியில் அதிதீவிர பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும், மக்களிடமிருந்து அதற்குப் போதியளவான ஒத்துழைப்பு கிடைக்கப் பெறவில்லை.

குறிப்பாக நகரப்பகுதிகளில் வாகனங்களின் நடமாட்டம் 40 - 50 சதவீதம் வரையில் காணப்படுவதுடன் மக்களின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. 

90 சதவீதம் வரையில் உயர் சமூக இடைவெளியைப் பேணுவதன் ஊடாக கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையையும் அதனால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையையும் குறைப்பதே பயணக்கட்டுப்பாட்டை விதிப்பதன் பிரதான நோக்கமாகக் காணப்பட்டது.

எனவே அதிதீவிர பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள இக்காலப்பகுதியில் அநாவசியமாக வெளியில் செல்வதைத் தவிர்த்துக் கொள்வதுடன் இயலுமானவரையில் தனிமையிலிருந்து இந்தத் தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என்று பொதுமக்களிடம் கேட்டுக் கொள்கின்றோம்.

மக்களின் ஒத்துழைப்பு கிடைத்தால் மாத்திரமே தற்போதைய நெருக்கடி நிலைமையை ஓரளவிற்கேனும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும். மாறாக மக்கள் ஒத்துழைப்பு வழங்கா விட்டால், சட்டங்களைப் பயன்படுத்திக்கூட நிலையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதென்பது கடினமான விடயமேயாகும்.

அதேபோன்று அண்மைக் காலத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களில் ஒட்சிசன் தேவை உயர்வாகக் காணப்படுவோரின் எண்ணிக்கையும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது.

கடந்த காலங்களுடன் (ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இனங்காணப்பட்ட தொற்றாளர்கள்) ஒப்பிடுகையில் இலங்கையில் ஒட்சிசன் தேவைப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை 441 சதவீதத்தினால் (நான்கரை மடங்கு) அதிகரித்துள்ளது.

தென்கிழக்காசிய நாடுகளைப் பொறுத்த வரையில் ஒட்சிசன் தேவைப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை அடிப்படையில் நோக்குகையில் நேபாளம் முதலிடத்திலும் வியட்நாம் இரண்டாவது இடத்திலும் இலங்கை மூன்றாவது இடத்திலும் இருக்கின்றது.

இதிலிருந்து நோயின் தீவிரம் அதிகரித்து வருகின்றது என்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது. அதன் காரணமாக இனிவருங்காலங்களில் அதிகளவான மரணங்கள் பதிவாகக்கூடும்.

No comments:

Post a Comment