ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ விரைவில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படவிருப்பதாக வெளியான செய்தி குறித்து பொதுஜன பெரமுனவின் முஸ்லிம் அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் அங்கம் வகிக்கும் நகர சபை, பிரதேச சபை முஸ்லிம் உறுப்பினர்கள் இலங்கையின் பல பாகங்களிலும் உள்ளனர். கட்சி ஸ்தாபிக்கப்படுவதற்கு முன்பதாக முஸ்லிம்களின் விடயம் தொடர்பாக பசில் ராஜபக்ஷவே ‘முஸ்லிம் முற்போக்கு முன்னணி’ என்ற அமைப்பை உருவாக்கினார்.
அதன் பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதன் பின்னர் முஸ்லிம் முற்போக்குக் கூட்டணி என்பது ‘ஸ்ரீலங்கா பொதுஜன முஸ்லிம் பெரமுன’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இவை அனைத்தும் பசில் ராஜபக்ஷவின் ஆலோசனையின் அடிப்படையில்தான் நடைபெற்றன.
அத்துடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமைப் பீடத்தில் முஸ்லிம்களுடனான சந்திப்புகள் அடிக்கடி நடைபெற்றன. இருப்பினும் இக்கூட்டத் தொடர்கள் கடந்த பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னால் உத்தியோகபூர்வமான முறையில் நடைபெறவில்லை.
எனவே பசில் ராஜபக்ஷவின் பாராளுமன்ற பிரவேசத்தின் பின்னர் அவர் எமது கட்சியின் ஸ்தாபகர் என்ற அடிப்படையிலும், முஸ்லிம்களின் விவகாரங்களில் அதிக அக்கறையுடன் செயற்பட்டவர் என்ற வகையிலும் விரைவில் முஸ்லிம் பிரதிநிதிகளுடனான ஒரு சந்திப்பை ஏற்படுத்தி, கட்சியை வளர்ப்பதற்கும் முஸ்லிம்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் ஆவன செய்ய வேண்டுமென கட்சியின் தலைமைப் பீடத்தை வேண்டுகிறோம்.
ஏ.ஓ. முஹர்ரிஸ்
No comments:
Post a Comment