துறைமுக நகரை எதிர்க்காத முஸ்லிம்கள் தேச துரோகிகளா ? தேசப்பற்று பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது ? - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 2, 2021

துறைமுக நகரை எதிர்க்காத முஸ்லிம்கள் தேச துரோகிகளா ? தேசப்பற்று பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது ?

கொழும்பு துறைமுக நகரை எதிர்க்காதவர்கள் தேசத்துரோகிகள் என்ற தோற்றப்பாடு அண்மையில் முஸ்லிம் மக்கள் மத்தியில் உருவாக்கப்பட்டது.

மக்கள் செல்வாக்கில்லாத சிலர் எதிர்வரும் தேர்தலில் தன்னை ஸ்திரப்படுத்துவதற்கே இவ்வாறான புரளியை உருவாக்கினர். இறுதியில் பாராளுமன்ற வாக்கெடுப்புடன் அனைத்தும் புஸ்வானமாகியது.

முஸ்லிம்கள் ஒருபோதும் இலங்கை தாய் நாட்டுக்கு துரோகம் செய்த வரலாறுகள் இல்லை. நாட்டை பிரிக்கின்ற நீண்ட ஆயுதபோராட்டம் நடைபெற்றபோது ஒரே மொழியை பேசுகின்ற தமிழ் தரப்புக்கு ஆதரவளிக்காமல் தாய்நாட்டுக்கே தங்களது விசுவாசத்தை வெளிப்படுத்தினார்கள்.

சஹ்ரான் குழுவினரின் தாக்குதலுக்கு பின்பு எஞ்சியுள்ள அதன் உறுப்பினர்களை அரச படைகளிடம் காட்டிக்கொடுப்பதில் முஸ்லிம்களே அதிக தீவிரமாக செயல்பட்டனர்.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு முஸ்லிம்களின் பங்களிப்பு மிகப்பெரியது. அதாவது முஸ்லிம்கள் இல்லாவிட்டால் இன்று இருக்கின்ற நிலையைவிட மிக மோசமான நிலையில் பொருளாதார பின்னடைவு இருந்திருக்கும்.

அதுபோல் சர்வதேச விளையாட்டுக்களில் இஸ்லாமிய நாடுகளின் வீரர்கள் போட்டியிடுகின்றபோதிலும், எமது நாட்டு வீரர்களின் வெற்றிக்காகவே நாங்கள் உழைப்பது வழமை. இதுபோல் ஏராளமான விடயங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

வெளிநாட்டு சக்திகள் எமது நாட்டை அழிக்க முற்பட்டால் முஸ்லிம்கள் நாட்டுக்காகவே தங்களை அர்ப்பணிப்பார்கள். ஒருபோதும் வெளிநாட்டு சக்திகளிடம் காட்டிக் கொடுக்கமாட்டார்கள்.

அவ்வாறிருந்தும் பெரும்பான்மை மக்களின் வாக்குகளை கவர்வதற்காக தென்னிலங்கையில் இனவாத அரசியல் விதைக்கப்பட்டு முஸ்லிம்களின் நாட்டு பற்று திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யப்படுகிறது.

சஜித் பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி இன்று ஆட்சி அதிகாரத்தில் இருந்திருந்தால், கொழும்பு துறைமுக நகரை ஆதரித்திருப்பார்கள். அவர்கள் எதிர்க்கட்சி என்பதற்காக இன்று எதிர்க்கின்றார்கள். இது அவர்களது அரசியலாகும்.

விடயம் இவ்வாறு இருக்கும்போது மக்கள் செல்வாக்கிழந்த சில அரசியல்வாதிகள் எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் மக்களை கவரும் நோக்கில் தேசப்பற்று என்ற புது புரளியை உண்டுபண்ணி அதில் பலரை தேச துரோகிகளாக காண்பிக்க எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளது.

இருந்தபோதிலும் தேசப்பற்று பற்றி நாங்கள் அதிகம் பேசுகின்ற நிலையில், அது பற்றி இஸ்லாம் என்ன கூறுகின்றது என்றும் சற்று ஆராயவேண்டும்.

“இனவெறி அல்லது தேசப்பற்றுக்காக இஸ்லாமிய கொடியின்கீழ் போரிட்டாலும் அல்லது அதற்கும் மேலாக நபி அவர்களின் படையில் இருந்தாலும் அவர்கள் செல்லுமிடம் நரகம்” என்று ரசூலுல்லாஹ் அவர்கள் கூறியுள்ளார்கள்.

உஹுது யுத்தம் முடிவடைந்த பின்பு, ரசூலுல்லாஹ்வின் படையில் கலந்துகொண்டு மிக வேகமாக எதிரியுடன் போரிட்ட “குஜ்மான்” அவர்களின் மரண செய்தியை கேள்வியுற்ற பின்பே இவ்வாறு ரசூலுல்லாஹ் அவர்கள் கூறியுள்ளார்கள்.

விடயம் இவ்வாறு இருக்கும்போது கொழும்பு துறைமுக நகரை எதிர்க்காதவர்கள் நாட்டுக்கு துரோகிகள் என்று எந்த அடிப்படையில் பத்வா வழங்கினார்களோ தெரியவில்லை.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

No comments:

Post a Comment