(எம்.மனோசித்ரா)
தென்மேற்கு பருவ பெயர்ச்சி மழை ஆரம்பித்துள்ளதால் நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு நோய் அதிகரிக்கக் கூடிய அபாயம் காணப்படுகிறது. கொவிட் பரவலுக்கு மத்தியில் டெங்கு நோய் அச்சுறுத்தலும் ஏற்படுமாயின் அது சுகாதார தரப்பிற்கு பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும். எனவே மக்கள் தமது வீட்டு வளாகத்தில் நுளம்பு பெறுகாமல் இருக்கும் வகையில் சுற்றாடலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் அருண ஜயசேகர தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், நாட்டில் கடந்த 5 மாதங்களில் 7860 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். மே மாதத்தில் இனங்காணப்பட்ட 859 நோயாளர்களில் மூன்றில் ஒரு பங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே இனங்காணப்பட்டுள்ளனர்.
எனவே கொழும்பு உள்ளிட்ட ஏனைய சகல மாவட்டங்களிலுள்ள மக்கள் தமது வீட்டு வளாகத்தில் நுளம்பு பெறுகாமல் இருக்கும் வகையில் சுற்றாடலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
கொவிட் பரவலுக்கு மத்தியில் டெங்கு அச்சுறுத்தலும் அதிகரிக்குமாயின் அது சுகாதார தரப்பினருக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
இவ்விரண்டும் வைரஸ் நோய் என்பதால் ஆரம்ப கட்ட அறிகுகளும் ஒரே மாதிரியானவையாகவே உள்ளன. எனவே அறிகுறிகள் தென்படுபவர்கள் என்ன நோய்க்கு உள்ளாகியுள்ளனர் என்பதை துரிதமாகக் கூற முடியாது.
எனவே நோய் அறிகுறிகள் காணப்படுபவர்கள் தாமதிக்காது வைத்தியசாலைகளுக்கு செல்ல வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம் என்றார்.
No comments:
Post a Comment