(செ.தேன்மொழி)
கற்பிட்டி பகுதியில் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவரிடம் ஒரு இலட்சம் ரூபாய் பணத்தை கப்பமாக பெற்றுக் கொள்ள முயற்சித்த விமானப்படை சிப்பாய்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோண தெரிவித்தார்.
இதன்போது அவரும் மேலும் கூறுகையில், கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்குடா பகுதியில் முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த நபர்களிடம், கெப் ரக வாகனமொன்றில் வந்த நபர்களிருவர் ஒரு இலட்சம் ரூபாய் பணத்தை கப்பமாக பெற்றுக் கொள்ள முயற்சித்ததாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பில் விமானப்படையின் மூன்று சிப்பாய்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமையே இவ்வாறு முச்சக்கர வண்டியில் சென்ற நபர்களிடம் கப்பம் பெற்றுக் கொள்ள முயற்சித்துள்ளனர்.
இந்நிலையில், சந்தேக நபர்களை கைது செய்துள்ள பொலிஸார், அவர்களை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, அடையாள அணிவகுப்பில் ஈடுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, மேற்படி சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment