6 மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை : ஒரு சில இடங்களில் வெள்ளப் பெருக்கு எச்சரிக்கை : பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் - News View

About Us

About Us

Breaking

Thursday, June 3, 2021

6 மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை : ஒரு சில இடங்களில் வெள்ளப் பெருக்கு எச்சரிக்கை : பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

சீரற்ற காலநிலை காரணமாக, கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, களு கங்கை, களனி கங்கை, அத்தனகலு ஓயா ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் கம்பஹா, மினுவங்கொடை, ஜா-எல, மில்லனிய, களுத்துறை, ஹொரணை, இங்கிரிய, மத்துகம ஆகிய பிரதேசங்களில், நதிப் படுக்கைகளில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக, நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டின் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மி.மீ அளவான மிகப் பலத்தமழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டின் தென் மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை மேலும் தொடரும் சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

No comments:

Post a Comment