மோசமடையும் கல்முனைப் பிராந்தியம் - கடந்த 24 மணி நேரத்தில் நான்கு மரணங்கள், 52 தொற்றாளர்கள் : டாக்டர் சுகுணன் - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 30, 2021

மோசமடையும் கல்முனைப் பிராந்தியம் - கடந்த 24 மணி நேரத்தில் நான்கு மரணங்கள், 52 தொற்றாளர்கள் : டாக்டர் சுகுணன்

பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)

கல்முனைப் பிராந்தியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நான்கு மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், 52 கொவிட்-19 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர். கல்முனைப் பிராந்தியத்தில் கொவிட்-19 மரணங்களின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலைமை எமது பிராந்தியத்தைப் பொறுத்த வரையில் பாரதூரமானதாகும். மக்கள் மனது வைத்துச் செயற்பட்டால் மட்டுமே இத்தொற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும். சுகாதார நடைமுறைகளைப் பேணி நடப்பது போல் நடிப்பதால் இத்தொற்றைக் கட்டுப்படுத்தவே முடியாது என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜீ.சுகுணன் தெரிவித்தார்.

கொவிட்-19 தொற்றினால் மரணமடைந்த நால்வரில் மூவர் மருதமுனைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுள் 39 வயதுடைய ஒருவரும் இந்நோய்த் தொற்றினால் மரணமடைந்துள்ளார். மரணமடைந்த நால்வரில் ஒருவர் சம்மாந்துறை பிரதேசத்தைச் சேர்ந்தவரும் அடங்குகிறார்.

கடந்த 24 மணி நேரத்தினுள் கல்முனைப் பிராந்தியத்தில் அதிகப்படியாக அக்கரைப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயப் பிரிவில் 14 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாவிதன்வெளி பிரதேசத்தில் 10 பேரும், பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஆறு பேரும், காரைதீவு பிரதேசத்தில் ஐவரும், நிந்தவூர் பகுதியில் நால்வரும், இறக்காமம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மூவரும், சம்மாந்துறை, அட்டாளைச்சேனை, கல்முனை வடக்கு, கல்முனை தெற்கு ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா இருவரும், ஆலையடிவேம்பு மற்றும் சாய்ந்தமருது ஆகிய பிரதேசங்களில் தலா ஒவ்வொருவரும் கொவிட்-19 தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

பாலமுனை பிரதேச வைத்தியசாலையில் 64 கொவிட்-19 நோயாளர்களும், மருதமுனை பிரதேச வைத்தியசாலையில் 105 தொற்றாளர்களும் அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் 36 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, அக்கரைப்பற்று நுரைச்சோலை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் 988 பேரும், அட்டாளைச்சேனை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் 87 பேரும், ஒலுவில் மத்திய நிலையத்தில் 20 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் அதிகாரி பிரிவின் கீழுள்ள 13 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் திருக்கோவில் பிரதேசத்தைத்தவிர ஏனைய அனைத்து பிரதேசங்களிலும் கொவிட்-19 மரணங்கள் நிகழ்ந்துள்ளமையால் இப்பிராந்தியத்திலுள்ள அனைவரும் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்க வேண்டும் என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜீ.சுகுணன் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment