பயணத்தடை தொடருமா? இல்லையா? 14 ஆம் திகதிக்கு முன் அறிவிக்கப்படும் : விசேட வைத்திய நிபுணர்களின் அறிவுறுத்தல்களுக்கமையவே நாட்டை முடக்கியுள்ளோம் - இராணுவத் தளபதி - News View

About Us

About Us

Breaking

Sunday, June 6, 2021

பயணத்தடை தொடருமா? இல்லையா? 14 ஆம் திகதிக்கு முன் அறிவிக்கப்படும் : விசேட வைத்திய நிபுணர்களின் அறிவுறுத்தல்களுக்கமையவே நாட்டை முடக்கியுள்ளோம் - இராணுவத் தளபதி

பயணத்தடை தளருமா? நீடிக்குமா? என்பது தொடர்பில் எதிர்வரும் 14ஆம் திகதிக்கு முன் அறிவிப்போம். விசேட வைத்திய நிபுணர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமையவே நாட்டை முடக்கி வைத்துள்ளோம். மக்களின் உயிர்களே எமக்கு மிகவும் முக்கியம் என கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். 

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இருக்கும் இலகுவான வழிமுறை நாட்டை முடக்குவதென்றால் அந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தியாக வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நாடளாவிய ரீதியில் நாளாந்தம் 2 ஆயிரத்து 500 இற்கும் அதிகமான கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர் எனவும், மரணங்களும் அதிகரித்துள்ளன எனவும் சுகாதாரத் தரப்பினர் தொடர்ச்சியாக எமக்கு வலியுறுத்தினர்.

இந்நிலையில், தற்போது நாட்டைத் திறப்பது ஆரோக்கியமான விடயமல்ல என்பது எமக்கும் தென்பட்டது. ஏற்கனவே இரண்டு வாரங்கள் பயணத் தடை பிறப்பிக்கப்பட்டாலும்கூட அதில் முறையாக மக்கள் செயற்படாத நிலையொன்று காணப்பட்டது. அதன் பின்னரும் ஒரு சில பகுதிகளில் மக்களின் அநாவசியச் செயற்பாடுகளை அவதானிக்க முடிந்தது. 

எனவேதான் 7ஆம் திகதி வரையில் பிறப்பிக்கப்பட்டிருந்த பயணத்தடையை மேலும் ஒரு வார காலம் நீடிக்கத் தீர்மானித்தோம். இந்தத் தீர்மானமானது ஜனாதிபதியின் தனித் தீர்மானமோ அல்லது நான் எடுத்த தனித் தீர்மானமோ அல்ல. நாட்டிலுள்ள விசேட வைத்திய நிபுணர்கள் மேற்கொள்ளும் ஆய்வுகளுக்கு அமைய, கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படுகின்றது.

எனவே, ஏற்கனவே 14 நாட்கள் பயணத் தடை பிறப்பிக்கப்பட்டாலும் கூட 21 நாட்கள் தொடர்ச்சியாகக் கட்டுப்பாடுகளை விதித்தால் மட்டுமே முழுமையான பெறுபேறுகள் வெளிப்படும். 21 நாட்களுக்குப் பின்னரும் பயணத்தடை நீடிக்குமா? தளருமா? என்பது தொடர்பில் எதிர்வரும் 14ஆம் திகதிக்கு முன் அறிவிப்போம்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இருக்கும் சரியான வழிமுறை நாட்டை முடக்குவதென்றால் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். இதனால் மக்களுக்கு சிரமங்கள் ஏற்படும். ஆனால், அதனையும் தாண்டி மக்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டே செயற்படுகின்றோம் என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment