புதிய மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் - மத்திய அரசை வலியுறுத்தினார் தமிழக முதல்வர் ஸ்டாலின் - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 26, 2021

புதிய மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் - மத்திய அரசை வலியுறுத்தினார் தமிழக முதல்வர் ஸ்டாலின்

மத்திய அரசு அறிமுகப்படுத்திய மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடத் தொடங்கி இன்றுடன் ஆறு மாதங்கள் நிறைவடைகின்றன. அவர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது 'பாராளுமன்ற நடைமுறைகளை புறக்கணித்து அவசரம் அவசரமாக கொண்டுவந்த 'விலை உறுதி மற்றும் பண்ணைச் சேவை சட்டம் 2020', 'வேளாண்மை உற்பத்தி வர்த்தகம் மற்றும் வர்த்தக மேம்பாடு சட்டம் 2020', 'அத்தியாவசியப் பொருள்கள் திருத்த சட்டம் 2020' ஆகிய மூன்று வேளாண் சட்டங்களையும் எதிர்த்து நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் டில்லியில் தங்கள் போராட்டத்தை துவங்கி இன்றுடன் ஆறு மாத காலம் நிறைவு பெறுகிறது.

இன்றளவும் போராடும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை உணர்வுகளை மதித்து அந்த மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதற்கு ஒன்றிய அரசு இதுவரை முன்வரவில்லை.

ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தி அதற்கான தீர்வு காண்பதற்கும் முயற்சிக்கவில்லை என்பதும் கவலை அளிப்பதாகவே இருக்கிறது.

2021 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையில் 'இந்த மூன்று சட்டங்களையும் திரும்பப் பெற தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி இவற்றை இரத்து செய்திட ஒன்றிய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தப்படும்' என்று தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டது.

எனவே, டில்லியில் போராடும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று மூன்று வேளாண் சட்டங்களையும் ஒன்றிய அரசு திரும்பப்பெற வேண்டும் என்றும், விவசாயிகளுக்கு வேளாண் சட்டங்கள் தொடர்பாக திமுக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று அந்த அறிக்கையில் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டிருக்கிறார்.

முன்னதாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி புது டில்லியின் எல்லையில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் திகதி முதல் போராட்டத்தை தொடங்கினர். கடந்த ஆறு மாத காலமாக தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்தால் இதுவரை நூற்றுக்கணக்கான விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். மத்திய அரசு விவசாய சங்கங்களுடன் நடத்திய 11 கட்ட பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் எட்டப்படாததால் டிராக்டர் பேரணி உள்ளிட்ட போராட்டங்களை நடத்திய விவசாயிகள், தங்கள் போராட்டம் ஆறு மாதங்களை எட்டியதை நினைவூட்டும் வகையில், இன்று நாடு தழுவிய கருப்பு தின போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.

40 விவசாய சங்கங்கள் நடத்தும் இந்தப் போராட்டத்திற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 13 எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

கருப்பு தினப் போராட்டத்தில் பங்குபற்றுவதற்காக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் டில்லியை நோக்கி படையெடுத்துள்ளனர்.

மேலும் இந்த போராட்டத்தால் கொரோனாத் தொற்று பரவும் அச்சம் இருப்பதாக ஹரியானா பாஜக அரசு கவலை தெரிவித்துள்ளது.

ஆனால், விவசாயிகள் கொரோனா நடைமுறைகளை பின்பற்றுவோம் என்றும், போராட்டத்தில் சமூக இடைவெளி பின்பற்றப்படும் எனவும், கிருமிநாசினி முழுமையாக தெளிக்கப்படும் எனவும் உறுதி அளித்துள்ளனர்.

அத்துடன் இந்த விவகாரத்தில் மத்தியில் ஆளும் பாஜக அரசு தங்களை வில்லனாக சித்தரிப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டியிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment